தங்கி இருப்பேனா என்று என்னுள்
கேள்வி இல்லை
நீ தங்கி தூங்கி போன
என் படுக்கையின் ஓரங்களில்
இன்னும் மிச்சம் இருக்கிறது
உன் ஆழ முத்தங்கள்
தனிமை என்னை அச்சுறுத்திய
கால கட்டங்களில் அறிமுகமானவன் நீ
இரவுகளின் சத்தங்கள் என்னை
நடுங்க வைத்துக்கொண்டிருந்த காலம் அது
தைரிய போர்வை போர்த்திய
என் தூக்கங்களில் எப்போதுமே ஈரம்
நிறைந்திருந்திருக்கின்றது
உன் அறிமுகம் என் தயக்கம்
நம் பயணங்கள்
கட்டி அணைத்து இறுக்க தோன்றிய
உன் வியர்வை வாசம்
அணைக்க வைத்த
உன் ஆண்மை
உள்ளங்கையில் தேங்கிய நீராய்
வழிந்து எங்கே போனாய்
நண்பனே
நீளும் விரல்களை
பற்றிட விழையும் போதெல்லாம்
என் கனவுகள் எனக்கு முன்னே
விழித்து விடுகின்றன
போய் வா எங்கேனும்
நீருள் வேராய் படர்ந்து
காத்திருக்கிறேன்
கடந்து போன நம் நிமிடங்களை
பற்றிய படி
No comments:
Post a Comment