Saturday, April 30, 2011

நீர்க்குட காகம்





















மிக நீண்டதொரு பயணத்திற்கு
பின்னான பொழுதுகளில் உன் காமம்
கட்டுக்கடங்காமல்  என் மேல் உன்னை
விசிறி இருப்பாய்.

உன் இருப்பை நான் உணரும் முன்னமே
உன் பிறிதொரு பயணத்தையும்
தொடங்கி விடுவாய்.

உன் இருத்தலும் இறுத்தலுமாய்
காதல் வாழ்ந்து கொண்டிருப்பதை
மற்றொரு நாளில்
பாட்டி கதை சொன்ன நாட்களில் சொன்னாய்.

காயத் தொடங்கிய நுனி இலையின் 
ஒற்றை நரம்பில்  ஒரு சிலந்தி
மாளிகை கட்டிகொண்டிருப்பதை சொல்லி
உன்னை தடுத்து 
காட்ட விரும்பினேன்.

அசுர சிரிப்பொன்றில்
அதனை அறுத்தெறிந்து விலகி செல்கிறாய்.

பாறையின் மறைவொன்றில்
ஒரு இரவில் கதை சொல்லத் தொடங்கினாய்.
கதையின் நடுவில்
கேள்விகள் வைத்தாய். 
பதிலாய் என் ஆடை அவிழ்த்தாய்.

நெகிழும் ஆடையில்
விரல் வைத்து பிரித்து
கேள்விகளால் பிணைத்தாய்.

 நீர்க்குட காகமாய்
கேள்விகளும் பதில்களுமாய்
உனை நிறைத்துக் கொண்டாய்.

என்னுள் உன்னை ஊற்றினாய்
இல்லை
ஊற்றியதாய் எனை நம்ப வைத்தாய்.

நம்பிக்கையின் முடிவில்  
சட்டென எழுந்து
பாறையில்
தேய்த்துக் கொண்டு
மறுபடி பயணம் தொடங்கினாய்.

நிலவொளி ஆடை
உடுத்திக் கிடக்கிறேன்
சூழும் இரவின் கரங்களில்.

கேள்விகளும் பதில்களும்
பின்னி கிடக்கின்றன
என் அருகில்.

தாகம் தீராக் காளியாய்  நான் !!!