Friday, May 28, 2010

முதல் காதல் கடிதம்

இன்று மாலைதான் வந்து சேர்ந்திருந்தது
எனக்கான முதல் காதல் கடிதம்

எப்போதோ எங்கிருந்தோ அனுப்பப்பட்டு
இப்போதுதான் வந்திருக்கிறது
என் கனவின் முதல் படி
நிறைய பறவைகளின் சத்தங்களுக்கிடையில்
அதைத் திறக்கிறேன்

முதல் சில வரிகள்
வண்ணங்கள் நிறைந்தவையாய்
மாறிப் போயிருக்கிறது
என் தோட்டத்தின் பூக்களுள்
சென்று மறைகின்றன

மெல்ல மெல்ல நான் காதல் கொண்ட
நிமிடங்கள் என்னுள் விரிகின்றன

எனை ரசித்த அவன்
என் கவிதை கொண்டாடிய அவன்
என் இயல்பைப் புகழ்ந்த அவன்
கொஞ்சம் கொஞ்சமாய் இதழ் தீண்டி
உயிர் நுழைந்தவன்

தொலை பேசி நிமிடங்கள்
நீண்டு கொண்டே இருந்த காலங்கள்

கைப் பிடித்து காதல் சொல்லி
கனவுகளில் வாழக் கற்றுகொடுத்தவன்
தலையணைகளுக்குள் மென் காமம்
தூவி விட்டு சென்றவன்

இரவுகளின் நீள் பொழுதுகளில்
அருகாமை உணரச் செய்தவன்

இன்றும் என் வியர்வையின் மணம்
அவனுடையதாய் இருப்பதை உணர்கின்றன
உடலின் வியர்வைச் சுரப்பிகள்

மணம் உணர்ந்த மனத்துடன் கடிதம் தொடர்கிறேன்

தொடரும் வார்த்தைகள் கட்டெறும்புகளாய்
நிறைகின்றன என் அறைச் சுவற்றில்
அவன் திருமண மாலையின் மணத்துடன்

காரணங்கள் அடுக்கடுக்காய்
படியேறி வருகின்றன
கதவடைக்கத் தெரியாமல்
இன்னும் கடிதத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
கடிதத்துடன் மட்டும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்

எறும்புகள் என் கால் விரல் சுவைத்துத்
தின்றபடி முன்னேறிக் கொண்டிருக்கின்றன
ஒவ்வொரு பாகமாய் ருசி பார்க்க!!!!