இன்று மாலைதான் வந்து சேர்ந்திருந்தது
எனக்கான முதல் காதல் கடிதம்
எப்போதோ எங்கிருந்தோ அனுப்பப்பட்டு
இப்போதுதான் வந்திருக்கிறது
என் கனவின் முதல் படி
நிறைய பறவைகளின் சத்தங்களுக்கிடையில்
அதைத் திறக்கிறேன்
முதல் சில வரிகள்
வண்ணங்கள் நிறைந்தவையாய்
மாறிப் போயிருக்கிறது
என் தோட்டத்தின் பூக்களுள்
சென்று மறைகின்றன
மெல்ல மெல்ல நான் காதல் கொண்ட
நிமிடங்கள் என்னுள் விரிகின்றன
எனை ரசித்த அவன்
என் கவிதை கொண்டாடிய அவன்
என் இயல்பைப் புகழ்ந்த அவன்
கொஞ்சம் கொஞ்சமாய் இதழ் தீண்டி
உயிர் நுழைந்தவன்
தொலை பேசி நிமிடங்கள்
நீண்டு கொண்டே இருந்த காலங்கள்
கைப் பிடித்து காதல் சொல்லி
கனவுகளில் வாழக் கற்றுகொடுத்தவன்
தலையணைகளுக்குள் மென் காமம்
தூவி விட்டு சென்றவன்
இரவுகளின் நீள் பொழுதுகளில்
அருகாமை உணரச் செய்தவன்
இன்றும் என் வியர்வையின் மணம்
அவனுடையதாய் இருப்பதை உணர்கின்றன
உடலின் வியர்வைச் சுரப்பிகள்
மணம் உணர்ந்த மனத்துடன் கடிதம் தொடர்கிறேன்
தொடரும் வார்த்தைகள் கட்டெறும்புகளாய்
நிறைகின்றன என் அறைச் சுவற்றில்
அவன் திருமண மாலையின் மணத்துடன்
காரணங்கள் அடுக்கடுக்காய்
படியேறி வருகின்றன
கதவடைக்கத் தெரியாமல்
இன்னும் கடிதத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
கடிதத்துடன் மட்டும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
எறும்புகள் என் கால் விரல் சுவைத்துத்
தின்றபடி முன்னேறிக் கொண்டிருக்கின்றன
ஒவ்வொரு பாகமாய் ருசி பார்க்க!!!!
Friday, May 28, 2010
Subscribe to:
Posts (Atom)