Wednesday, July 1, 2009

என் கனவின் சாம்பல்


என் கனவுகள் அடுக்கிய
சிதையில் உன் கேள்விகள்
தீ வைத்து சென்றன.

ஒரு மதிய வேளையில்
கொளுத்தும் பகலின் உக்கிரத்தில்
எனை எரித்தேன் பதில் இல்லாமல்.

மெல்ல பற்றி எரியத் தொடங்கியது
என் இமையின் மயிர்.

கால் மடக்கி
கைகள் கட்டி மெதுவாய்
சத்தம் எழுப்பாமல் அடங்க ஆரம்பித்தேன்

எரியும் நெருப்பின் தாக்கத்தில்
அறையில் இருந்த நமது
திருமண புகைப்படம் உருகிக் கொண்டிருந்தது.

நேற்றுதான் கொண்டாடி கழட்டி
மாட்டி இருந்த மாலையின் வாசத்தில்
நெருப்பின் மணம் தனியே
அலைந்து தனித்திருந்தது.

என் கனவுகளின் நிறம் சற்றே
மங்க தொடங்கியது
உன் கனவுகளின் வெளிச்சத்தில்

கைக்குள் அடங்கிய என்
கனவுகளின் சாம்பல்
காற்றில் எங்கும் பறக்கத்தொடங்கியது

என்றாவது ஒரு நாள்
உன் காலடியில் மெத்தை விரிக்கும்
என் ஆசைகளின் படிமானம்.