Tuesday, December 14, 2010

மீண்டும் நான்

மிக நீண்ட நாட்களுக்கு பின்னான ஒரு பதிவு. நேரமின்மை, தனிப்பட்ட பல காரணங்கள் எழுத்து என்னை தனிமைப் படுத்தி சென்று விட்டது, அதில் இருந்து மீண்டு மீண்டும் எழுத முயற்சித்துள்ளேன்,. பார்ப்போம் இது எத்துனை நாட்கள் தொடர்கிறதென்பதை. :)

வார்த்தை தேடும் முகவரிகள்





உன் முகவரியில் சேர இயலாமல்
சேர்க்க முடியாமல்
திரும்பி விட்ட
கடிதங்கள் அவை

வெற்றுக் கடிதங்களுடைய வார்த்தைகள்
தானே உருப்பெறுகின்றன
எந்த வித உரிமையும் உறவும் கொள்ளாமல்
நமக்கிடையே அவை கிடந்து
தவிக்கின்றன


வார்த்தைகள் அவைகளாகவே வாழ்ந்து
விடுவதில்லை
அவை உருப்பெறுகின்றன
உயிர்பெற்று


கடந்த நாட்களின் வலிகள்
காதலின் ரணங்கள்
காமத்தின் காயங்கள்
இவை மட்டுமே கொண்டு அவை
தங்களுக்குள் உரையாடிக் கொள்கின்றன

முகங்கள் மறந்து இந்த தெருவில்
அவை உனக்காக காத்திருந்தன

வேகமாக நகரும் மனிதர்களின்
சுவாசக் காற்றில் அடையாளம் தேடி
ஒவ்வொரு சுவாசத்தினையும்
அடைகாத்திருக்கிறது
வேனிற் காலக்காற்று

கடந்து போன ஒவ்வொரு காலடிகளும்
ஏதோ ஒரு விதத்தில்
பிரிவினை பலமாய் அழுந்த
சொல்லிக் கொண்டிருந்தன


ஒரு வெய்யில் காலத்தில்
முடிவானது நம் பிரிவு
அந்த நொடியில் முதல் வார்த்தை
கடிதத்தில் பதிந்தது - அது மட்டும் அல்ல
முதல் வலியும் பதிந்தது
ஞாபகத்தில் இருந்து


எங்காவது காத்திருக்கும் என் கடிதம்
உனக்காகவென நான்
அகழ்ந்தெடுத்த வார்த்தைகள் தாங்கி
தங்களுக்குள் விவாதம் நிகழ்த்திக்கொண்டு

உரையாடல்கள் தீரும் வேளையில்
அவை முகவரி தேடிக்
கிளம்புகின்றன

அடைய முடியா தூரத்தில்
உனக்கென ஒரு கூட்டை
நீ தேடிக் கொள்கிறாய்
நான் அறிய முடியாதென நம்பி

நம்பிக்கைதானே நம்முள் எல்லாமே !!!!

Saturday, July 31, 2010

உயிர்த்தெழுதல்














இருட்டின் மத்தியில் நடந்து கொண்டிருக்கிறோம்
மெல்லிய இசை சுற்றிலும் அடர்ந்திருக்கிறது

நேற்றிரவு தொடங்கிய பயணம் அது
மரங்கள் பேசும் ஓசை மட்டும் கேட்டபடி
நகர்ந்து கொண்டிருக்கிறோம்
எங்களின் நிழல்களோடு

சுற்றிலும் இரவின் இசை
வழி நடத்திக் கொண்டிருக்கிறது எங்களை

அமைதியின் கணம் தாங்க இயலாத
நொடியில் தீர்மானித்தோம்
இறந்து போவதென்று


எடுத்த முடிவின் படி
ஒருவர் இன்னொருவரை
உண்ணத் தொடங்கினோம்


பயணத்தின் முதல் நொடி போல
கைகளில் இருந்து
தொடங்கினோம்

விரல் இழந்த உள்ளங்கைகளில்
மெல்லியதாய் முத்தங்கள் பரிமாறிக்கொண்டோம்

மிச்சமிருந்த காதல் பிடுங்கி
கிளைகளில் மாட்டி வைத்தோம்
அடையாளத்திற்காக  


இன்னும் பேச்சுத் தொடங்கியாக வில்லை

திடீரென உணர்ந்தோம்
பின் வந்த நிழல் காணாமல் போனதை

பல காதலின் சாயல்
இதயத்தின் உள் புகுதலை உணர்ந்தோம்
தள்ளி நின்று வேடிக்கை பார்த்தோம்

சட்டென மரத்தின் கிளைகளில் இருந்து
நாங்கள் இறங்கிப் போவதை பார்த்தோம்
கடந்து வந்த வழியில்

எனினும் பயணம் முடியவில்லை
கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேறுகிறது
எங்களின் உண்ணுதலும்
உண்ணுதலின் நடுவே நடையும்


மீண்டும் எங்கள் படுக்கையில்
நாங்கள் உயிர்த்தெழுந்தோம்
விரல் இல்லா உள்ளங்கைகளோடு

Friday, May 28, 2010

முதல் காதல் கடிதம்

இன்று மாலைதான் வந்து சேர்ந்திருந்தது
எனக்கான முதல் காதல் கடிதம்

எப்போதோ எங்கிருந்தோ அனுப்பப்பட்டு
இப்போதுதான் வந்திருக்கிறது
என் கனவின் முதல் படி
நிறைய பறவைகளின் சத்தங்களுக்கிடையில்
அதைத் திறக்கிறேன்

முதல் சில வரிகள்
வண்ணங்கள் நிறைந்தவையாய்
மாறிப் போயிருக்கிறது
என் தோட்டத்தின் பூக்களுள்
சென்று மறைகின்றன

மெல்ல மெல்ல நான் காதல் கொண்ட
நிமிடங்கள் என்னுள் விரிகின்றன

எனை ரசித்த அவன்
என் கவிதை கொண்டாடிய அவன்
என் இயல்பைப் புகழ்ந்த அவன்
கொஞ்சம் கொஞ்சமாய் இதழ் தீண்டி
உயிர் நுழைந்தவன்

தொலை பேசி நிமிடங்கள்
நீண்டு கொண்டே இருந்த காலங்கள்

கைப் பிடித்து காதல் சொல்லி
கனவுகளில் வாழக் கற்றுகொடுத்தவன்
தலையணைகளுக்குள் மென் காமம்
தூவி விட்டு சென்றவன்

இரவுகளின் நீள் பொழுதுகளில்
அருகாமை உணரச் செய்தவன்

இன்றும் என் வியர்வையின் மணம்
அவனுடையதாய் இருப்பதை உணர்கின்றன
உடலின் வியர்வைச் சுரப்பிகள்

மணம் உணர்ந்த மனத்துடன் கடிதம் தொடர்கிறேன்

தொடரும் வார்த்தைகள் கட்டெறும்புகளாய்
நிறைகின்றன என் அறைச் சுவற்றில்
அவன் திருமண மாலையின் மணத்துடன்

காரணங்கள் அடுக்கடுக்காய்
படியேறி வருகின்றன
கதவடைக்கத் தெரியாமல்
இன்னும் கடிதத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
கடிதத்துடன் மட்டும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்

எறும்புகள் என் கால் விரல் சுவைத்துத்
தின்றபடி முன்னேறிக் கொண்டிருக்கின்றன
ஒவ்வொரு பாகமாய் ருசி பார்க்க!!!!

Monday, April 19, 2010

எனது மற்றுமொரு ப்ளாக்-ன் பதிவு.

எனது மற்றுமொரு ப்ளாக்-ன் பதிவு. 
http://payanangalil.blogspot.com/2010/04/deyyyyyyyyyyyy.html

Tuesday, March 30, 2010

எனக்கும் விருது !!!!

விருதிற்கு நன்றி பத்மா (http://kakithaoodam.blogspot.com/)












இன்னும் பலருடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என நினைக்கிறேன். அவர்களுடன் மீண்டும் அடுத்த பதிவில். :)

Tuesday, March 23, 2010

சிவமெரிக்கும் நான்



















வடுவாய் நிற்கிறது
வாழ்ந்து கழிந்த வாழ்க்கை

தொடரத் துடிக்கும் கால்களை
வெட்டிப் போடுகிறது
நிதர்சனம்

எனை மறைத்து தான் மட்டும்
நான் போல் போகிறது
என் நிழல்

வலியுடனே வாழ்கிறேன்
சுகமாய் இருப்பதாய்ச்
சொல்லிக் கொள்கிறேன்
எனக்கு நானே

எனை நானே கொல்கிறேன்
அனைத்தும் மறந்து விட்டதாய்
அல்லது மறைந்துவிட்டதாய்

மண் குழைத்து எனைச் சுற்றி
சுவர் எழுப்புகிறேன் 
கால்கள் மறைத்து மேல் எழும்புகிறது

செங்கற்கள் கொண்டு கட்டிடம்
தனைக்கட்டிக் கொள்கிறது

சுவர் எங்கும் நீ விசிறி விட்டுப் போன
இரத்தத் தெறிப்புகள்

என் மேகம் எங்கும் மின்னல் தெறித்து
என் உடல் எரிக்கிறது
என் காலின் கீழே
சிவமெரித்துக் கிடத்தி இருக்கிறேன்

நானே வானாய்
மாறிப் போன நிமிடத்தில்
எனக்கு ஆயிரம் கைகள் முளைத்தது
ஒவ்வொரு விரலிலும்
ஆயிரம் சிசுக்கள்
உதிரம் குடித்தபடி

நண்பகலில் மிளகாய் அரைத்து
உள்ளங்காலில் பூசி
ஒப்பனைகள் தொடர்கிறேன்

காயங்கள் காயும் முன்
நெருப்பெடுத்து அப்பிக் கொள்கிறேன்

கட்டிடம் முடியும் தருணம்
நானே கல்லாய் மாறிப் போகிறேன்

மனிதம் தேடி தவம் தொடர்கிறது

மறுபடி ஒரு பயணம்















நிகழ் காலங்கள் நிஜம்
போலத் திரிகின்றன
கடந்து வந்தவை காணாமல்
போய் விட்டதாய்
ஒரு உணர்வு

இன்றிருப்பது மட்டுமே இன்றாகிப் போகிறது

ஏதோ ஒரு காட்டுக்குள்
கட்டவிழ்ந்து கிடக்கிறேன்
பயணங்களின் முடிவு தேடி
நடந்து கொண்டே இருக்கிறது நேரம்

உடன் நடக்கும் பாதச் சுவடு
மறந்து பாதை மாறி நடக்கிறேன்
எங்கோ சிதறும் ஒரு துளி நீரின்
சத்தத்துக்காக

ஒவ்வொரு நாளும் புதிதாய்ப்
பிறக்கிறேன்
மறுபடி ஒரு பயணத்துக்காக

நீர்த்துப் போன வாழ்வில்
சாரல் அடித்து
வெடித்துத் திறக்கிறது
என் பாலை

வெளியெங்கும் விரவிக் கிடக்கிறது
எப்போதோ சிந்திப் போன
புணர்ச்சியின் மிச்சங்கள்

அணைத்துப் போன தடங்கள்
தடுமாற்றத்துடன்
நிகழ்ந்ததைச் சொல்கிறது
என் இரவுக் கதைகளில்

தொடங்கும் இடம் தேடி
அலைகிறது மறந்து போன
காதலின் எச்சங்களை
மனம்

ஏன் வந்ததென்று தெரியாமல்
வந்து விட்டு போகிறது
ஒவ்வொரு இரவுகளிலும்
நேற்றின் ஆழ் முத்தங்கள்

நீளும் பயணம்
நீண்டு கொண்டே இருக்கிறது
மேலும் மேலும்
இன்னும் இன்னும்

மறுபடி ஒரு பயணத்துக்காய்
நான்

Thursday, March 4, 2010

நெரிக்கும் இழப்பு




















 சிநேகிதிகளின் வீடுகளுக்கு செல்வதில்
பெரும் தயக்கம் வருகிறது
இப்போதெல்லாம்
வார விடுமுறை நாட்களின் மேல்
கோபம் வருவதைத்
தவிர்க்க முடியவில்லை

இயல்பாகக் கூட
அவர்களின் கணவர்களை பற்றி
விசாரிக்க இயல்வதில்லை

"நன்றாக இருக்கிறாயா" என்பதுடன்
கேள்விகள் முடிந்து விடுகிறது

தோழி ஒருத்தியின்
குழந்தைப் பேறு பற்றி
இன்னொரு தோழியின் மூலம் மட்டுமே
தெரிந்து  கொள்ள வேண்டியுள்ளது

சிநேகிதிகளின் வீடுகளில்
வரவேற்பறை தாண்டி
பாயும் கண்களை மிகவும்
சிரமப்பட்டு அடக்க வேண்டியுள்ளது

சாதாரணமாக பகிர்ந்து கொண்டிருந்த
காதல்களும் காமங்களும்
 திடீரென தனிமை சாயம்
பூசிக்கொண்டுள்ளது

வார்த்தைகள் மாறி
கண் ஜாடைகள்
அதிகம் பரிமாறுகிறது
மூடப் பட்ட கதவுகளின் பின்னால்

இயல்பாய் இருக்க நடித்தல்
கழுத்தை நெரிக்கிறது

கணவனை இழத்தல் அத்துணை பாவமா?

உயிரோடோ அல்லது இல்லாமலோ!!!

வீழும் நினைவுகள்




















வாழ்வின் விளிம்பில்
ஒட்டிக் கொண்டிருக்கிறது
வெறுமையின் கணங்கள்

நகர்ந்து கொண்டிருக்கும்
பேருந்து ஜன்னல்களில்
நம் நேரங்கள் காற்றில்
சலசலத்துக் கொண்டிருக்கிறது

திருமண மண்டபத்தின் சத்தத்தில்
மௌனக் கேவல்கள்
கரைந்து போய்க் கொண்டிருக்கிறது

பரிமாறப்பட்ட பந்தியில்
உணவோடு சேர்த்து
உணர்வுகளும் அனைத்தும்
வீணடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது

மாற்றப்படும் மாலைகளில்
கசங்கிப் போயுள்ளது
மறந்து போன சிலவும்
மறந்தே ஆகவேண்டிய பலவும்


சுற்றி நிற்கும் உறவுகளில்
உன்னைத் தேடிக் கொண்டுதான் உள்ளது
வாய் விட்டு சொல்ல முடியாத
நம் நினைவுகள்

விழுந்து கொண்டிருக்கிறேன்
விரல் பற்ற முடியாத ஆழத்தில்
விடை தெரியா வினாக்கள் சூழ்ந்த
அந்த காரத்தில்

எழ முடியாத ஆழம் எனினும்
உனக்காக ஆனதினால்
காதலுடன் சரிகிறேன்
எப்போதும் போல்

Tuesday, February 9, 2010

காத்திருக்கும் கோலம்














மெல்லிய இசைக் கோர்வையின்
ஒற்றை இழையின் ஊடே
நம் காதலின் ஓசை
தனியொரு பாதையில்
பயணம் செய்யும்

கொட்டிகொண்டிருக்கும்
மழையின் சத்தத்தில்
புது அர்த்தங்கள்
படித்துக் கொண்டிருப்போம்
இறுக மூடப்பட்ட ஜன்னலின் பின்னே

உன் மௌனங்களின் பின்னாலான
வலியினை உணர்கிறேன் எப்போதும் போல்

வலையைப் பின்னுகின்றன
சொல்லாமல் விட்டுப் போன
கடைசி முத்தங்களின்
முகவரிகள்

விரல் பின்னும்
அணைப்புகள் அந்நியப்பட்டு
நிற்கின்றன

ஒற்றைக் கேள்வியும்
அதனைச் சுற்றி வரும்
வெற்று பதில்களுமாய்
காலக் கடிகாரம் வேகமாய்
ஓடிக்கொண்டிருக்கிறது அதன் போக்கில்

நமக்கான ஒரு கூடு
காத்திருக்கிறது
நம்மை மட்டுமே குடியேற்றம் செய்ய

யாரோ வரைந்து போன கோலம் ஒன்று
நமக்கான நல்வரவுக்காக
பூசணிப்பூ சூடிக் கொண்டிருக்கிறது

ஏதோ ஒரு நொடியின்
தரிசனத்துக்காக
என் காலங்கள் அனைத்தையும்
குவித்து வைத்து அருகில்
அமர்ந்திருக்கிறேன்

Monday, February 8, 2010

மொழியற்றக் கதறலின் ஓசை
















இரு வேறு நிழல்களின்
முயக்கத்தில் உருவானவள் நான்

இருட்டின் இறுக்கத்தை புணர்வதின்
மகத்துவம் அறிந்தவள்


விட்டுப் போகும் மேகம் துரத்தி
முடிவில்லா பாதையில் பயணிக்கிறேன்

நீள்பாதையின் தூரத்தில்
ஒற்றை நிழல் ஓங்காரமாய் திரிகிறது

நான் விரும்பியவையும்
எனை விரும்பியவையும் ஆனவை
புது வேஷம் போட்டு நிற்கின்றன

நிரந்தர வலியொன்று
கொஞ்சம் கொஞ்சமாய்
ரத்தம் பாயும்  எலும்பினுள்
குடியேறத் தொடங்கியுள்ளது

காற்று நிறையும் சுவாசப்பை
அழுக்கு சுமந்து
குமட்டுகிறது

 நானாய் மாறிப் போன
இருளொன்று
என் கண்களின் வெண்ணிறத்தில்
கருமை  பூசுகிறது

உள்நாக்கில் அரவமின்றி
நாகமொன்று படமெடுக்கிறது

எதிர் நிற்கும் என் நிழலின்
உச்சி முதல் பாதம் வரை
கூரிய பல் கொண்டு கிழிக்கிறது

கிழிக்க கிழிக்க
என் சதைக் கீறி
வெளி வருகிறது
என்னுள் நீ நட்டு விட்டுப் போன
நாளையின் விதையொன்று

துளிர்க்கும் இலையின்
நுனி தடவியபடி
கடந்த நம் இரவுகளின்
புணர்தலின் ஓசை
மொழி பெயர்ப்பின்றி

Friday, January 15, 2010

பிய்ந்து தொங்கும் என் பொம்மை




















அமைதியாய் கழிந்து கொண்டிருக்கிறது
தனிமையின் பொழுதுகள்

விரல் நகங்கள் பூசப்பட்ட சாயத்தின்
சுவடுகளை இழந்து கொண்டிருக்கிறது

நிழல்கள் நிஜங்களாய் எதிரில்
நடனமாடிக்கொண்டிருக்கிறது

மனவறையில் இறுக்கிப் பூட்டப்பட்ட
நினைவுகள் எழும்பிக்கொண்டிருக்கிறது
தளும்பும் காயங்களின் தழும்புகளோடு

துரத்துவதைத் திரும்பிப் பார்க்காமல்
விரைந்து கொண்டிருந்திருக்கிறேன்

புதுப் புது வலிகள்
படிப்பித்திருக்கப் பட்டிருக்கிறது
கட்டாயமாய் 

நான் கேட்காமலே
எனை ஆட்கொண்டிருக்கிறது

ஒரு சோம்பலான மதிய வேளையில்
உனைத் தேடி உன் அறைக்கு
வந்திருந்தேன் வீட்டிற்குத்  தெரியாமல்

நீ இல்லா உன் அறையின்
வெறுமை தாங்காமல் வெளியேறினேன்

வழி காட்டுவதாய்த்தானே சொன்னார்கள்
பின் ஏன் அந்த
இருட்டுக் குடிசையில்
தள்ளினார்கள்

வலிக்கிறது
என் உடல் முழுதும்
உருவம் அருவமாய் படர்ந்திருக்கிறது
ஏதோ ஒன்று

வலி சொன்னாலும் மரத்துப் போன
செவிகள் மடல் வைத்து
மூடிக் கொண்டிருந்திருக்கிறது

கைகள் மட்டும் தங்கள் வேலையை
இயல்பாய் தொடர்ந்திருக்கிறது

ஒரு கை
இல்லாத என் முலை
தேடி அழுத்திவிட்டு
கொண்டிருந்திருக்கிறது

இன்னொரு கை
உறுதியாய் நின்ற 
தன் எழுச்சியை தடவிக்கொண்டபடி
பெருமையுடன்

பிரியாத இடம் பிரித்து
உள் நுழைய எத்தனிக்கும் ஒருவன்

பிரிந்த உதடு வழியே
உயிர் உறிஞ்சியவாறே  ஒருவன்

கடந்த பாதை சுவட்டின் சூடு
ஆறும்முன் மீண்டும் மீண்டும்
காதில் கேட்கிறது
அலறல் சத்தம் மட்டும்

இரவுகளில் தனி ஆவர்த்தனம் ஆடுகிறது
விரல்கள் உடல் வழியே
இன்னும் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு

இன்றும்
அமைதியைத் தான் கழிந்து கொண்டிருக்கிறது
தனிமையின் பொழுதுகள்

 -  இது உண்மையிலேயே உண்மையாய் நடந்த ஒரு சம்பவம்.