Thursday, December 31, 2009

வலி சுமக்கும் வழி















வலி நிறைந்த வழிதனைக்
கடந்து வந்துள்ளேன்
கடக்கும் தூரம் என் முன் நீள்கிறது

கடந்த பாதையை உற்று நோக்கின்
மேடு பள்ளங்கள்
என் முகத்தின் சாடையை
ஒத்திருக்கின்றன

பயணத்தின் நடுவே
கண்ணில் தெரியும் மரங்கள்
எதுவும் மரங்களாய் இல்லை
என்னுடன் வாழ்ந்து
என்னுள் மரித்துப் போன நீயாய்
நிற்கின்றன

வாழ்வின் ஆரம்பப் புள்ளியில்
நிற்பதாய் நினைத்திருந்தேன்
பல நேரங்களில்
முடியும் நேரம் என் வீட்டு கடிகாரத்தில்
என்னை விட வேகமாய் ஓடுகின்றது

முகமெங்கும் ஒவ்வொரு நாளும்
சுருக்கங்கள் பாவத்தின் எண்ணிக்கையாய்

சோர்வின் அழுத்தம்
முதுகில் அழுக்காய்
எட்டாத தூரத்தில்  உறுத்துகிறது

மறந்து போகும் நிழலாய்
திடீரென என் முன் நீள்கின்றன
கனவுகள்

இரவுகள் மிகுந்த அச்சத்துக்கிடையில்
கழிகின்றன
முகம் போர்த்தும் போர்வை
இறுதி நெருப்பாய் கொதிக்கிறது

எனை நானே சுமக்கும்
பாடையாய் மாலை சூடி
ஊரெங்கும் ஊர்வலம் போகிறேன்

விடியும் ஒவ்வொரு காலையும்
போக்கியாக வேண்டிய
இன்றைய மணித்துளிகளை
கனமாய் ஏந்தி காத்திருக்கிறது

Monday, December 21, 2009

சிறகெரியும் வெண்புறா
















உனக்கும் எனக்கும் இடையில்
ஒரு மெல்லிய வெண்புறா
பறந்து கொண்டே இருக்கிறது
இடம் வலமாய்
சோர்வு இல்லாது இலக்கில்லாது

நீ எனக்காய் சேர்த்து வைத்த
காமம் என் மூக்கின் நுனியில்
சிந்தி விட்டு செல்கிறது

அதன் சிறகின் ஓசைக்கும்
சிலிர்ப்பவளாக நானும்
அதன் உடலின் ருசிக்காக
காத்திருப்பவனாக  நீயும்


என் சிறகெரித்து எனக்கான வானம்
தயார் செய்கிறாய்
எரியும் வாசனை நுகர்ந்து
உனக்காய் வாசனை திரவம் சேமிக்கிறாய்

பொசுங்கும் சிறகிலிருந்து
உன் கூட்டுக்கான வண்ணம் அடிக்கிறாய்

கற்பனைத் தெருமுனையில்
அமர்ந்திருக்கிறோம்
குளிருக்கு இதமாய்
நம் காதல் எரித்தவாறே

கனவுகளில்தான் என் காமம்
கொழுந்து விட்டு எரிகிறது
பரவசமூட்டும் இடம் தேடி
என் விரல் அலைகிறது

ஏதோ சாதித்து விட்டதாய்
ஒவ்வொரு இயங்குதலின் முடிவில்
பெருமையாய் முகம் பார்க்கிறாய்
உள்ளுக்குள் பொங்கும்
எச்சிலை எனக்குள்ளேதான்
நான் உமிழ்ந்து கொள்ளுகிறேன்
உனைப்பார்த்து சிரித்தபடியே

 எத்தனை முறை எரித்தாலும்
மீண்டும் பிறக்கிறது
ஒவ்வொரு விடியலிலும்

பதின்ம வயதில் தோன்றி
இன்றும் பறக்கும் என் வெண் புறா

Saturday, December 19, 2009

பிரார்த்தனை

இந்த ஒரு வாரம் மிகப் பெரிய சவால் எனக்கு. எனது வாழ்நாளில் நான் பேசாமல் இருந்ததாக சரித்திரமே இல்லை. ஆனால் இன்று அந்த சரித்திரம் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் முழுக்க நான் அமைதியாக இருக்க வேண்டியது அவசியம் நான் எப்போதும் பேசவேண்டும் என்றால். பார்ப்போம். தொண்டையில் இருக்கும் ஒரு சிறு பிரச்சினையினால் ஒரு வாரம் பேசக்கூடாது என்று டாக்டர் சொல்லி இருக்காங்க. நண்பர்களே உங்களுக்கு எல்லாம் இந்த ஒரு வாரம் ரெஸ்ட். அடுத்த வாரம் வருவோம்ல :)


எவ்வளவு விளையாட்டாக பேசினாலும் ஒரு சிறு பயம் இருந்து கொண்டே உள்ளது. பிரார்த்தனையை மட்டுமே நம்பியுள்ளேன்.

வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய அனுமதி கேட்டுள்ளேன் அலுவலகத்தில். பார்ப்போம். இந்த வாரம் நிறைய படிக்கவும் கேட்கவும் முடிவு செய்துள்ளேன். ஏதாவது நல்ல வீடியோ, ஆடியோ இருந்தால் அனுப்பி வைக்கவும் அல்லது டவுன்லோட் செய்ய சிபாரிசு செய்யவும்.  (gmail id : anuradan@gmail.com)

நன்றி.

Wednesday, December 16, 2009

நாமும் அவனும்
















 




சபிக்கப்பட்ட பழங்களின் மர நிழலில்
கால் நீட்டி அமர்ந்திருந்தோம்
ஒருவரையொருவர் அணைத்தபடி
வெற்று உடலாய்
மௌனமாய்
நமைப் பற்றி ஏதும் அறியாமல்
எந்த கேள்வியும் எழாமல்

தூர நின்று பார்த்த ஆதாம்
வேகமாய் அருகில் வந்தான்..
தன் ஆண்மையை நம்முள் பதிவு செய்வதற்காய்

அவன் குறி
நேற்றுப் பிறந்ததைப் போல சுருங்கிப் போனது
நம்மின் வெப்ப மூச்சில்....

 ---- 2008 -ல் நான் எழுதிய கவிதை. என்னாலும் எழுத முடியும் என்ற நம்பிக்கை கொடுத்த  கவிதை.

Tuesday, December 15, 2009

காசி - எரியூட்டுபவனின் பயணம்















சவங்கள் சிவமாகும் நதியின்
கரையில் நிற்கிறேன்
எரியூட்டப்படும் உடல்களின்
கதகதப்பு வேண்டி

கரையோர இடிபாடுகள் உள்ளேதான்
எனக்கான உணவு சமைத்து
ஆறிக்கொண்டிருக்கிறது

கையில் தடி கொண்டு காத்திருக்கிறேன்
வெப்பம் தாளாமல் எழுந்து
நடனமாடும் உயிரற்றவைகளின்
உடல்கள் அடித்து
உலையில் தள்ள

நிலவு வளரும் ஒரு நடு நிசியின்
நிசப்தத்தில்
மூழ்கடிக்கப்பட்ட பிணங்கள்
ஒவ்வொன்றாய் எழுந்து வரத் தொடங்கின
என் தனிமையை பகிர்ந்து கொள்ள

நாங்கள் பேசத் தொடங்கினோம்
ஒவ்வொருவராய்
தங்கள் வாழ்க்கையை
தங்கள் ஏமாற்றத்தை
வெற்றியை நினைத்த தோல்வியை
பகிர்ந்து கொண்டோம்

கடந்து செல்லும் பிணங்களை
வேடிக்கை பார்த்தபடி
பேசிக் கொண்டிருந்தோம்
தோள் கை போட்டு

எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டேன்
கண்ணுக்கு எட்டாத எல்லையின்
பின்புறம் ஒரு உலகம்
இருப்பதாய்ச் சொன்னார்கள்

கைப் பிடித்து அழைத்து செல்வதை
உறுதி கூறினார்கள்
அழைப்பினூடே அவர்களுடன்
நடக்கத் தொடங்கினேன்
 நதி மேல்

காலைக்குள் திரும்பி வந்து விட வேண்டிய
அவசரம் இருந்தும்
நடந்து கொண்டிருக்கிறேன்
காலைக்குள் திரும்பி வராவிடில்
என் தடி எனை அடித்து
உலையில் தள்ளி விடும்

ஒவ்வொரு இரவும் இப்படித்தான்
நடைப்பயணம் போய்க் கொண்டிருக்கிறேன்
என் தடியும் அமைதியாய்
அருகில் அமர்ந்திருக்கிறது
எனக்கான உடல்களும்
நான் எரியூட்ட காத்திருக்கின்றன

பட்டாம்பூச்சி வாழ்க்கை

















வளைந்து நெளிந்து செல்லும்
பாதையாகத்தான் போய்க் கொண்டிருந்தது
வாழ்க்கை.

திடீரென வந்த ஒரு திருப்பத்தில்தான்
உணர்ந்தேன் வளைவும் நெளிவும்
கடைசியாக முடிந்த வடிவம்
கேள்விக்குறி

வானவில் வர்ணம் என் மேலும்
அடிக்கப்படுகிறது
இரவு விளக்குகளின் ஜாலத்தில்
எனில்
பகல் நேர வர்ணம் என்னவோ
சிவப்பாக மட்டும் இருக்கிறது


ஒவ்வொரு இரவின் முடிவிலும்
பொங்கிப் பிரவாகமாகியது
பல காதல்கள்

நான் பத்தினியாவதும் பரத்தையாவதும்
பக்கத்தில் படுப்பவனின்
போதை நிலை பொறுத்தே இருக்கிறது

ஒரு நாள் சீதை -
                 அடிக்கடி தீக்குளிக்க வேண்டியதில்லை எவனுக்காகவும்
ஒரு நாள் கண்ணகி -
                 கால் சலங்கை கழட்ட வேண்டியதில்லை எந்த நீதிக்காகவும் 
ஒரு நாள் மாதவி -
                துறவியாக வேண்டியதில்லை வந்து போகும் எந்த நாடோடிக்காகவும்

இப்படியே இருந்து விட்டு போகிறேனே
ஏன் கல் எறிகிறாய்
காதலின் பெயர் சொல்லி

வர்ணிப்பின் எல்லையைத் தொட்டு விட்டு
என்னையும் தொட்டுவிட்டு மட்டும்
போன பலரோடு நீயும்
போய்விடு

வண்டி நிறைய பாரம் ஏற்றி உள்ளேன்
காதலின் பெயர் சொல்லி
இனிமேல் கடந்து செல்லும்
காதல் காற்றுக் கூட
அதன் அச்சாணியை முறித்துவிடும்

மரத்தும் மறந்தும் போன
வாழ்வின் ஸ்பரிசங்கள்
சவமாய்ப் போன பிறப்புகள்

நான் இறக்கும்  தருணத்தில் மட்டும்
என் தலையணை தூக்கிப் பார்

உன் முதல் முத்தமும்
இறுதி அணைப்பும் சேமித்து வைத்துள்ளேன்
அதன் மேல்தான்
என் வாழ்வியல்  நடனத்துக்கான
ஜதி சேர்த்துள்ளேன்

காரணம் சொல்லி கடந்து போனாய்
நான் உன்னுள் காற்றாய் கலந்து
போனதறியாமல்

இன்னும் எத்தனையோ காதல்
வைத்திருக்கிறேன்

உடல் வேகும் நிமிடம்
வெடித்துச் சிதறும் என் ஒவ்வொரு
அங்கமும் காதல்
பட்டாம்பூச்சியாய் உனைச் சுற்றும்
பிடித்து வைத்துக் கொள்

உன் உள்ளங்கைகளுக்குள்
பொத்தி வைத்து முத்தம் கொடு
மீண்டும் மலர்வேன்

Friday, December 11, 2009

தேநீர் அருந்தும் நினைவுகள்




இறுக்கிப் பிடித்த கைகளின்
விரல் வழியே
வழிந்து சென்றுவிடுகிறாய்
ஒவ்வொரு அணைப்பின் இறுதியிலும்

அடர்ந்த காட்டின்
நடுவே பற்றி எரிகிறது
உனக்காய் நான் பதுக்கி வைத்த
ஒற்றைக் கதவு

விரையும் வாகனங்கள் நிறைந்த
பாதையில் ஒவ்வொரு நிறுத்தத்திலும்
உனக்காய் ஒரு
முத்தத்தை விட்டுச் செல்கிறேன்

அவ்வப்போது
உன் வாகனத்தையோ
உன் ஆடையையோ உதறிப் பார்த்துக்கொள்
எங்காவது ஒட்டிக் கொண்டிருக்கும்
என் விடியலின் மிச்சங்கள்

நீ திரும்பும் வழிதனில்
நிறைய காற்றிருப்பதாய்
தலை கேசம் சரி செய்துகொள்கிறாய்
உன்னைத் தொடரும் என் சுவாசம்
உன்னை அறியாமல் தான்
பின் தொடரும்
நீ அறியாமல் உன் மேல் பொழியும்

மாலை நேரங்கள்
தங்கள் நிறம் இழந்து
ஊதாநிறப் பூ பூக்கின்றன
முழங்கால்கள் துவண்டு போகின்றன
நீ வந்து அழைப்பு மணி அழுத்தும் நேரம்

இதயம் சற்றே நின்று
எனைத் தட்டி பார்க்கிறது
உள்ளுக்குள்
ஒரு ஆணி தானே கழண்டு விடுகிறது

விரல் சொடக்கெடுத்து
கனவுகள் பகிர்கிறோம்
தொடர்ந்து வந்த
காற்றின் கரங்களை கட்டி வைக்கிறோம்
நினைவுகளை விலாசம் மாற்றி
அனுப்பி வைக்கிறோம்
கண்களுக்குள் காதலை
காமம் பற்றி எரிதலோடு சேர்த்து
படம் பிடித்தோம்

ஒருவருக்கு ஒருவர்
பாடம் எடுத்தோம்
பாடம் படித்தோம்

விடியும் வேளை உடை மாற்றி
உடை மாற்றினோம்
மெல்லிய சிரிப்போடு
மறுபடியும் மாற்றினோம்

வாழ்ந்து கொண்டே இருந்தோம்
விருட்சமாய் மாறிப் போனது
நம் காதல் நாமறியாமலே

ஒரு மழைக்கால நீண்ட கருஞ்சாலையில்
தனித்திருந்து  தேநீர் அருந்தும்
என்னிடம் மிச்சம் இருப்பது
சாலை கழுவிய
மழையின் சாரல்கள் மட்டுமே
விருட்சத்தின் விழுதுகள் பற்றி
தொங்கி கொண்டிருக்கிறது
கடந்தவையின் விதைகள்

Tuesday, December 8, 2009

நிழலாகிப் போன அவள் - உரையாடல் கவிதைப் போட்டிக்காக





















பகல்களின் மீதான
நடுக்கம் இன்றும்
குறையவில்லை அவளுக்கு

இரவுகளில் மட்டுமே
தன் கை விரல்களை தானே
பார்க்கிறாள் அவள்

இருட்டு அறைகளுக்குள்
தன்னைத் தானே பூட்டிக் கொள்கிறாள்
கண்ணாடியில் கூட
தன் பிம்பம் தெரிந்து விடாத படிக்கு

மேலே மேலே சுற்றப்பட்ட
இரவு ஆடைகளில் மட்டுமே
அந்த அறைகளுக்கும்
வலம் வருகிறாள்

அவனால் அடிக்கடி
கசக்கப்பட்ட தன்
சிறு வயது ஆடைகளை
கால்களில் கட்டி வைத்துள்ளாள்

ஒவ்வொரு முறையும்
அவசரம் அவசரமாக அவனால்
தரையில் விரிக்கப்பட்டு
அதனையும் மீறி
சிந்தியதைத் துடைத்து


நனைந்து நனைந்து
நிறம் மாறிப் போன
அவளது உள் பாவாடைகள்
அந்த அறை சட்டங்களில்
இன்றும் கிழிந்து தொங்குகின்றன

ஏதாவது உடையில் இருந்து
அவனால் கருவாக்கப்பட்ட
ஏதோ ஒன்று வெளி வந்துவிடும் என்ற
பதட்டம் அவள் கண்களில்
தெரிந்து கொண்டுதான் இருக்கிறது

உடைகளை சதா நேரமும்
உதறிய படியே நடக்கிறாள்
சிதறுபவைகளை 
பிய்ந்து போன செருப்புகளால்
மிதித்து அழிக்கிறாள்

அழித்த படி நடந்து கொண்டே
இருக்கிறாள்
நடந்த படியே உண்கிறாள்
நடந்த படியே தூங்குகிறாள்
நடந்த படியே வாழ்கிறாள்

படுப்பதின் மீதான பயம்
இன்னும் போக வில்லை
அவளுக்கு

ஜன்னலுக்கு வெளியிலான வாழ்க்கை


















நீண்ட பெரிய சத்திரத்தின்
இருட்டு மூலையில்
ஏதோ ஒரு சிணுங்கல் ஒலி
இருந்துகொண்டேதான் இருக்கிறது


பெருக்காமல் விட்டுப் போன
ஒரு திரை அரங்கின்
ஏதாவது ஒரு நாற்காலிக்கு
கீழே கசக்கிப் போட்ட
ஈரக் காகிதம் நகர்ந்து
சென்றுவிட வழிதெரியாமல்
வாசமின்றி
வாழ்ந்துகொண்டேதான் இருக்கிறது
அடுத்த நாள் காலை வரை

நீலப் படம் ஓடும்
அந்த தியேட்டரில்
இரவுக்காட்சிக்கு டிக்கெட்
குடுக்கும் அவனின்
மகளையும் அதே போன்றதொரு
படம் பார்த்தவன்தான்
இலவசமாய் கசக்கி
முகர்ந்திருப்பான் 

டிக்கெட் வாங்க
பணம் இல்லாமல் போஸ்டர்
பார்த்தவன்
இதையாவது இலவசமாக
பார்த்திருப்பான்

சாலையோரச் சண்டையில்
விலக்கி விடுவதை விட
விலகும் நேரம் தெரியும்
அவளின் ரவிக்கையின் ஈரம்
கதகதப்பாய் இருக்கிறது
சுற்றி நிற்கும் கூட்டத்துக்கு

கூடும் வரைக்
காத்திருந்துவிட்டு
முழு முயங்குதலில்
கல் எறிந்து சந்தோசப்படுகிறார்கள்
துணையின் உச்ச நேரத்தில்
எப்போதும் எழுந்து செல்பவர்கள்


இன்னும் வேடிக்கை பார்ப்பவர்கள்
இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள்

அது
மரணமோ
கற்பழிப்போ
ஆடை அவிழ்ப்போ
கூடலோ அது எதனுடையதாக இருந்தாலும்

தன் ஜன்னலுக்கு வெளியே

Friday, December 4, 2009

துளிர்க்கும் இலை





















உதிரும் இலையும் மறுபடி துளிர்க்கும்
வேறொரு பேரில்
வேறொரு வடிவத்தில்

உதிர்ந்ததாய்த்தான் நினைத்திருந்தேன்
உன் அரவணைப்பில்
உள்ளங்கால் சிலிர்க்கும் வரை

என் கண் பார்த்துக் காதல்
சொல்லிவிட்டு
கை கோர்த்துக் காத்திருந்தாய்
விரல்களின் அழுத்தம்
சொல்லித் தந்தது
நமக்கான என் காதலை

ஒரு பேருந்து பயணத்தில்
தோள் சாய்த்து
காதோரமாய் கனவைச்
சொல்லச் சொன்னாய்

சுற்றி நின்ற உலகம் மறந்து
நம் குழந்தைக்கான பேர் சூட்டினோம்

உன் மூச்சுக் காற்று
பட்டு தாண்டி செல்லும் போதெல்லாம்
அடி வயிற்றில் ஆசையாய்
ஒரு அவஸ்தை

இதழ் ஸ்பரிசம்
ஒவ்வொரு இதழாய்
பிரித்து மகரந்தம்
சேமிக்க கற்றுத் தருகிறது
உனக்காக

இன்னும் நிறைய நிறைய
சேமித்து வைத்திருக்கிறேன்
சாவி தொலைத்து

நம்பிக்கை
















நம்பிக்கையின் மீதான
நம்பிக்கை சிறிது சிறிதாக
குறைந்து கொண்டே வருகிறது

வலிகளும் வாலிகளும் நிறைந்த
கானகமாக உள்ளது வாழ்க்கை
எந்த மரத்தின் பின்
எவன் ஒளிந்திருப்பானோ
இல்லை
எது ஒளிந்திருக்குமோ
தெரியவில்லை

சந்தர்ப்பங்களுக்காக
எதன் பின்னாவது காரணம்  சொல்லி
மறைந்து போகிறார்கள் மனிதர்கள்

கூடவே நடந்து வரும் நிழல்
திடீரென காணாமல் போகிறது

உள்ளுணர்வு பல நேரங்களில்
சரியாகத்தான் இருக்கிறது
இதுவும் கடந்து போகுமென்ற
வாசகம் உரைக்கும்போது

அனைத்தும் கடந்து போகுபவையாக
மட்டுமே இருப்பதுதான்
நிதர்சனமாக உள்ளது

மழை குளித்த மரத்தின்
அடியில் தங்கும்போதும்
உணர்வின் வெப்பம் எரித்தபடியே
இருக்கிறது

காலடி பட்டு இறந்துபோன
வண்ணத்துப் பூச்சியின் இறகைப்
பார்க்கும்போதெல்லாம்
அருகில் படுத்து
உறங்கிவிடத் தோணுகிறது

என் உள்ளங்கை முழுதும்
அதன் நிறங்களின் நிறமாற்று பேதம்
மெல்ல முன்னேறுகிறது

தேன் எடுப்பதாய் சபதம் போட்டு
காணாமல் போன வண்டொன்று
வெகு நேரமாய் உள்ளே
சத்தமிட்டுக் கொண்டிருக்கிறது

நடக்கும் பாதை நீண்டு கொண்டே இருக்கிறது
ஒவ்வொரு பயணத்திலும்

Thursday, December 3, 2009

கனவுக்குள் கனவாய்

ஒவ்வொரு புணர்தலின்
முடிவிலும் உனக்கு திருப்தியா
என்ற கேள்வியோடு ஆடை புனையத்
தொடங்குகிறேன்

என்னின் உச்சம் உணர்ந்ததில்லை
நான்
அதற்கான கேள்வியும் உன்னுள்
வந்ததில்லை

உடை களைதலில் நீ காட்டும்
அவசரம் ஒவ்வொரு வேளையிலும்
ஒரு கேள்வியாக மட்டுமே நின்று போயிருந்தது 

இரவுகள் இன்னுமொரு
நரகமாக மாறத் தொடங்கிய
நாட்களின் இறுதியில்
அவன் புதியதாய்
பூக்கத்தொடங்கினான்

என் பாடல்கள் அவனுக்காய்
புது சுவரம் கோர்க்கத் தொடங்கின

என் உடைகளின் நிறம்
அவனுக்குரியதாய் வர்ணம் பூசின

என் படுக்கை விரிப்புகளின்
பூக்கள் புது மணத்துடன்
விரியத்தொடங்கின

மலராத என் வீட்டுத் தோட்டத்தின்
நடுவே நின்று
பூத் தொடுத்தேன்

வாடும் முன் அள்ளியெடுத்து
அவன் அணைப்பதாய்
கனவுகள் கண்டேன்

அவன் என்னை மெதுவாய்
மிக மெதுவாய்
ஸ்வரம் பிரிக்கத் தொடங்குகிறான்

என் விரல்கள் அவன் தொடலுக்காய்
ஏங்கி மருதாணி சாயம்
பூசியது

என் வருகையை அவனுக்கு
அறிவிக்க மட்டுமே
கால்கள் கொலுசணிந்து
நடக்கத் தொடங்கியது

மறுபடியும் விடிந்து விட்டது
என் கனவுக்குள் சென்று
உறங்கத் தொடங்கி விட்டான் அவன்

Saturday, November 21, 2009

மரணக்கோப்பை

















தளும்பிக்கொண்டே இருக்கிறது
மழையினுள் நீட்டப்பட்ட
எனது கோப்பை

அதனுள் இருந்த கடைசிச் சொட்டு
விஷமும் இப்போதுதான்
உள்ளிறங்கத் தொடங்கியது

நாக்கின் நிறம் சற்றே மாறி வருகிறது
சிவப்பாய்
வெளிர் சிவப்பாய்
வெண்மையாய்
மங்கிப் போன நிறமாய்

அதன் தன்மையும் அதனூடே
மாறுகிறது
இறுகிப் போய் விட்டதாய் உணர்கிறது
மூளை

பூசப்பட்ட நகச் சாயம் தாண்டி
விரல் நகங்கள் உயிர் இழக்கின்றன

தொண்டையில் பரவும்
தீ சிறிது சிறிதாக
பாதை தெரிந்து பயணிக்கத்
தொடங்குகிறது

என்றோ சுவைத்த
ஐஸ் கிரீம் இதைபோலத்தான்
இருந்ததாய் ஒரு நினைவு

ஒவ்வொரு வயதின் ஞாபகங்களும்
ஒவ்வொரு துளி விஷத்தை
கொண்டாடுகிறது

எனக்கு எப்போதுமே மரணத்தின்
மீதான காதல் சலித்ததில்லை

மரணத்தின் சுவை உணர
எனது கோப்பை ஏந்தி நிற்கையில்தான்
காமத்தின் முதல் கட்ட ஆர்வம் உணர்ந்தேன்

இதோ இந்த நிமிடம்
புணர்தலின் உச்சத்தில்
இயங்கிக் கொண்டிருக்கிறேன்
விரல்கள் தானாய் நகர்கின்றன

இந்த நிமிடத்தையும் கடந்து
பார்வை மங்கி விடக்கூடாது என்ற
பரிதவிப்போடு

Thursday, November 12, 2009

பெண்மைச் சான்றிதழ்
















காதலாகியும் கசிந்துருகிக்
காண்பித்தாயிற்று
ஆயினும்
கசியும் உதிரம் மட்டுமே
என் கற்பை நிரூபிக்குமென்றால்


போடா

(- ஆனந்த விகடனில் படித்த ஒரு கேள்வி பதிலுக்கான எனது பதில்)

Tuesday, November 10, 2009

மரணத்தின் வாசனை

ஒரு காற்றைப் போல கிளம்புகிறது
மரணத்தின் வாசனை



காரணங்களை அடுக்கி
அனைவரும் கிளம்பிய பின்
காலியாக இருக்கும்
ஒரு கிராமத்தின்
சிதிலமான வீட்டின் திண்ணைகளில்
சற்றே இளைப்பாறுகிறது
களைப்பு தீர

திண்ணைகள் நிறைய கதைகள்
சேர்த்து வைத்திருக்கின்றன

பல மதியங்களில் உணவுக்கு
பின்னானபொழுதுகளில்
திண்ணைகள் கதைகள்
சேமிக்கத் துவங்குகின்றன

விக்கிரமாதித்தன் கதைகளில்
தொடங்கி
தெருமுனை பால்காரனுக்கும்
எதிர்வீட்டு பெண்ணுக்கும் இருந்த
உறவு வரைக்குமான கதைகள்
கால் முளைத்து
ஜன்னல் கம்பி பிடித்து
தொங்கி கொண்டிருக்கின்றன

அடர்ந்த மழைச்சாரல்
உடைந்த ஜன்னல் சதுரங்கள்
வழியாக நினைவுகளை
சிதறிச் செல்கிறது

மதிய நேர மரங்கள் சற்று
சுவாரஸ்யம் குன்றியவை
எனினும் அவை சுமந்து நிற்கும்
அந்த ஊரின் தோல்விகள் மற்றும் வலிகளை

கயிற்றுக் கட்டில்களின் கால்கள்
அழுகிய நோயினால்
பீடிக்கப் பட்டிருக்கிறது
உதிரும் தோல் தாங்கி

மரணம் மனிதருக்கு
மட்டுமானதில்லை

வெட்டப்பட்ட மரங்களிலும்
இடிந்த அரைச் சுவற்றிலும்
படர்ந்த சிலந்தி வலையிலும்
வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது
மரணத்தின் வாசனை

Friday, November 6, 2009

ஒரு பதிவு

http://payanangalil.blogspot.com/2009/11/blog-post.html

குறியீடுகள்

பாவத்தின் குறியீடுகள்
ஒவ்வொரு நாளும்
அகராதியின் புது அர்த்தம் சுமக்கும்

காதலின் வெளிப்பாடாய் மட்டுமே
விரிந்து சுருங்கும்
யோனி காமத்திலும்
பாவத்தின் எண்ணிக்கையில் முதலாவதாக
இருந்த போதும்

அளவுக்கு அதிகமான பசி
வயிற்றோடு மட்டும் நின்று விடுவதில்லை
நம்மில் பலருக்கு
எனினும் உண்டி சுருங்க வேண்டியது
கட்டாயமாக்கப்பட்டு விட்டது
என் தோழியருக்கு

பொறாமை பொதுவாய் மாற்றப்பட்டுவிட்டது
கலவிச் சுகம் பொதுவில்
இயக்கத்தின் எண்ணிக்கையின் அளவில்
பேசப்படுகையில்

சோம்பலில் மட்டுமே
விட்டுக் கொடுக்கிறான்
என் கனவுக் காதலனும் கூட
தன் ஆண்மையின் அதிகாரத்தை
சரிந்துப் படுத்து

அளவுக்கு மிஞ்சியக் காதலைக்
காட்டுவதைச் சொல்லி
என் ஆசைக் கூட்டின்
ஒவ்வொரு சிறகையும்
பிய்த்துப் போடுகிறாய்
இதழோரம் நகைக் கூட்டியபடியே
அளவுக்கு மீறினால்
அதுவும் பாவக் கணக்குகளின் எண்ணிக்கையை
அதிகரிக்குமாம்

இரவில் வந்து வேகமாய்க்
கூடி
உடன் மறைந்து போகும்
உனக்கெங்கே புரியப் போகிறது
உனக்காய் நான் சேர்த்து வைக்கும்
என் பரிசுகள்

வெறுப்புக் கொப்பளித்துத்
தலைக்கேறும் நரம்புகளின் வழியே

பாவத்தின் எண்ணிக்கையில்
கூடுதல் குறைதல் இருக்கலாம்
ஆனால் குறியீடுகள் சுமந்து
உண்டான தழும்புகள்

Thursday, November 5, 2009

துரோகத்தின் நிறம்

துரோகத்தின் நிறம்
இதுவரை புரிபடவில்லை எனக்கு

சமீபத்தில் எனைச் சுற்றி
கருப்பாய் ஒரு மேக மூட்டம்
கவிழத் தொடங்கியது
மேகத் திரை விலக்கி
எட்டிப் பார்த்தேன்

பார்க்கும் இடமெல்லாம்
ரத்த முட்கள்
வேலியாய்

என்றோ சிந்திப் போன
மழைத் துளி ஒன்று
இன்று என் மேல்
அமிலமாய்
என் சதை தின்ற படி

விடியலின் ஆரம்பத்தில்
என் உடல் எங்கும் கவியும்
நீல வெளி


தன் முகம் மறைத்த
துரோகம் கண் விழித்து
என் அருகே
படுத்து உறங்கத் தொடங்கியது
இன்று அதிகாலை

நம்பிக்கை பொய்த்துப் போன
நீள் பயணத்தின் முடிவில்
உயிர் அறுக்கின்றன
சில உறவுகள்

வார்த்தைகள் இரட்டைப் பிரசவ
வலியோடு வெளிவருகின்றன

நம்பிக்கை வெறும்
எழுத்தோடு நின்று விடுகின்றது

மேல் நோக்கி வளரும்
ஒவ்வொரு துளிரும்
மரித்த சிசுவின் வாசம் சுமக்கிறது

Tuesday, November 3, 2009

உறவாக

மிக நீண்ட நாட்களாய்
மங்கியதாய் ஒரு நினைவு என்னுள்
தங்கியுள்ளது

வாகனங்களற்ற ஒரு சாலையில்
மெல்லிய நீரோடையின்
சாரல் சத்தத்தோடு
உன் விரல் பிடித்து
தொலை தூரம் நடப்பதாய்.

எப்போது இந்த நினைவு
என்னுள் பதிந்தது எனக்கு
இந்த நிமிடம் வரையில்
தெளிவாகவில்லை

ஆனால் உண்மையில்
நான் யார் என்பதோ
என் உணர்வு உன்னைச் சுற்றிப்
பின்னப்பட்டது என்பதோ
உனக்கு தெரியாது

உன் பாதம் பின் பற்றி
என் சின்னஞ்சிறு பாதம்
எடுத்து வைத்து நடக்க
ஆசைப்பட்டிருக்கிறேன்

வாய்த்தது என்னவோ ஊமைக் காயங்கள்
மட்டும்தான்

உனக்கு வழி காட்ட
என்னால் இயலாது என்ற
ஒரு வார்த்தையில் வெகு தூரம்
விலகி நின்று கொண்டாய்

உன்னால் மட்டுமே நான்
வழி நடத்திச் செல்ல
கனவு கண்டது
 உன்னால்
உணர முடியாமல் போய்விட்டது
வசதியாக

உனக்கான எல்லையில்லா
வானம் விரித்து வைத்துக் காத்திருந்தேன்
ஆனால் உன் சிறகுகளை
நீயே வெட்டிக்கொண்டாய்
சூழ்நிலைக் கைதி
என்ற பெயர் சூட்டிக்கொண்டு

என்றாவது வெளிவருவாயா
எனக்கும் உறவாக?

Saturday, October 31, 2009

கேள்விகள்

ஒவ்வொரு நாளும் கேள்விகள்
நமைத் துரத்தும்

ஒரு கருப்பு நாளில்
தலை மேல் இறங்கும்

எங்கிருந்தோ கவ்விய
ஒற்றை மாமிசத்துண்டு ஒன்றை
அன்றுதான் அணிந்திருந்த
புதுச் சட்டையின் மேல்
அபிஷேகம் செய்யும்

ஒதுங்க இடமில்லா சாலையின்
நடுவில் போகையில்
நம் மேல் சேறடித்துப் போகும்
சில கேள்விகள்

தனிமையில் அமர்ந்திருக்கும்போது
காதோரம் ரீங்காரமிடும்
எங்கிருந்தோ பறந்து வரும்
கேள்விகள்

எடுத்துக் கொஞ்ச
எச்சில் உமிழ்ந்துவிட்டு போகும்
சில கேள்விகள்

 கலவியின் உச்சத்தில்
என்றோ பேருந்துப் பயணத்தில்
பார்த்துப் பெருமூச்சு விட்டவனின்
முகம் வந்து மறையும்

 சில முகங்கள் கேள்வியை மட்டுமே
நினைவில் நிறுத்தும்
எத்தனை சிரமப்பட்டாலும்

உதறி எழுந்து போய்விட முடியா
உறவுகளின் இறுக்கத்தின்
முடிவில் எஞ்சிருப்பது
கேள்விகளே

Tuesday, October 27, 2009

சிகண்டி

கல்லாலும் சொல்லாலும்
எனை நானே அடித்து
இறுகிப் போனவள் நான்

நிராகரிப்பின் உச்சம்
உனக்கான சாபமாய்
மாறிப்போகும் என்னுள்

பிரித்து எடுத்து கவர்ந்து
சென்றபோதே
உணர்ந்திருக்க வேண்டும் நீ
தவறிவிட்டாய்

உனக்காக நான் அமைக்கப் போகும்
முள் படுக்கை
உன் வீட்டு ஜன்னல் கம்பிகளுக்குள்
ஒளிந்திருக்கும்

ஒவ்வொரு பௌர்ணமி இரவும்
காற்றுக் குதிரை ஏறி
விரைகிறேன் இருட்டுக் காட்டில்

தங்கி விடக் கெஞ்சும்
உடலை விட
உனக்கான உக்கிரம் அதிகம் துடிக்கிறது

கையை மனையாக்கி
உடம்புக் கிடத்திப்
படுத்திருக்கிறேன்

சர்ப்பம் ஏறிப் போக
என் கருவறை வாகாகக்
காத்திருக்கிறது

உடலில் ஏறும் விஷம்
தலைக்கேறிக் கிரங்கிப்
பதுங்கியிருக்கிறேன்

போர்க்களத்தில் எதிரில் நிற்கும்
எதிரி எளிதில் அடையாளம்
தெரிந்துவிடுகிறான்

உள்ளில் வாழும் உன்னை
அடையாளம் காணத்தான்
நாளாகிப் போய்விட்டது

எனினும் உன் உயிரறுத்துக்
குருதி குடிக்கும்
என் பெண்மை

பொறுத்திரு

Friday, October 23, 2009

போய் வா நண்பனே




போய் வா நண்பனே
எந்த உறவுகளும் நிரந்தரமில்லை
கடந்து போகும் ஒவ்வொரு நிழலின்
வண்ணத்திலும் பல நினைவுகள்
சுமந்து போய் வா



வார்த்தைகள் மட்டும்
வாழ்க்கை ஆகிவிடுவதில்லை



என‌க்கு முன் ந‌ட‌ந்து போகும்
உன் கால‌டிக‌ள் ஒவ்வொரு நாளும்
ஆழ‌ப்ப‌திந்துபோன‌ ப‌ய‌ண‌ங்க‌ள்
உள்ளில் நிலைத்திருக்கும்


போக‌வேண்டிய‌ தூர‌ம் ம‌ட்டும்
மிச்ச‌மாய் பாதை பார்த்தபடி
ஒவ்வொரு மைல்க‌ல்லின்
முடிவிலும் ஏதோ ஒரு
ம‌ன‌தின் காய‌ம்


வெட்ட‌ப்ப‌ட்ட‌ பாறையின் இடையே
வ‌ழியும் ந‌ம்மின் க‌டைசி நிமிட‌ங்க‌ள்



இருட்டு வேர்வையில்
ம‌டிந்த‌ உத‌டுக‌ளின் இர‌த்த‌தில்
முடிந்து போன‌ க‌ண‌ங்க‌ள்



எனினும் க‌ட‌ப்போம்
போய் வா ந‌ண்ப‌னே
வ‌லிக்க‌ வ‌லிக்க‌ பிரிவின்
இன்ப‌ம் தாங்குவோம்

http://www.thinnai.com/?module=displaystory&story_id=30803202&edition_id=20080320&format=html

அழைப்பு மணி

நேற்றுதான் முதல் முறையாக‌
ஒரு அழைப்பு மணியை வாங்கி வந்தேன்
என் வீட்டில் மாட்டி வைக்க‌
ஒரு அழகிய கிளியும்
இரு மணிகளும்
ஒன்றுடன் ஒன்று பேசிக்கொள்ளுமாறு
அமைக்கப்பட்ட மணி அது



மிக நீண்ட நாள்
நெடுங்கனவு அது எனக்கு



ஒரு சதுர முற்றமும்
சிறிய‌ ச‌மைய‌ல‌றையும்
என‌க்கு ம‌ட்டுமேயான‌ ப‌டுக்கை அறையும்
நான்கு இலைக‌ள் ம‌ட்டும் செடியை கொண்ட‌
என் வீட்டிற்கான‌
அழைப்பு ம‌ணி அது



எங்கு அழைப்பு ச‌த்த‌ம் கேட்டாலும்
தானாக‌ திரும்பி பார்ப்ப‌து
இய‌ல்பாகி விட்ட‌
ஒரு நொடியின் முடிவில் தோன்றிய‌து
என் வீட்டுக்கும் தேவையான
ச‌த்த‌த்தின் ஒலி
குடிபோதையில் உன்னால்
த‌ட்டியும்
உதைத்தும்
உடைக்கப்பட்டுவிட்ட‌ க‌த‌வு
இனிமேல் என்னைப்போலவே அழாது
காய‌ங்க‌ளை சும‌ந்து



உன‌க்கான‌ ம‌ர‌ண‌ம்
கதவற்ற‌ வாச‌லில் கைக‌ட்டி வேடிக்கை
பார்த்துக்கொண்டிருக்கிற‌து
அத‌ற்கான‌ ஒலியை ப‌திவு செய்ய‌



அழைப்பு மணி ச‌த்த‌ம் கேட்ட‌தும்
க‌த‌றி அழ‌ ஒத்திகை
ந‌ட‌ந்து கொண்டிருக்கிற‌து
ச‌த்த‌மில்லாம‌ல்

Thursday, October 22, 2009

அழகான வாழ்த்து

நீண்ட நாட்களுக்கு பிறகு உருப்படியான ஒரு காரியம்.  ஒரு தாய் தன் மகளுக்கு தன் முகம் தெரியா நண்பர்கள் மூலம் வாழ்த்து சொல்லச் சொன்னது புதிதாகவும்  அர்த்தமுள்ளதாகவும் இருந்தது.

நான் ஒரு பயணம்  தொடர்பான  குழுவில்  உறுப்பினராக  இருக்கிறேன். இன்று  அந்த  email id-கு  ஒரு  mail வந்திருந்தது. தன்  மகளுக்கு  பிறந்த  நாள்  எனவும்  நண்பர்களை  வாழ்த்து சொல்லச் சொல்லியும். உடனே  வாழ்த்துக்களை தெரிவித்தேன் இரவு  1 மணியாக  இருந்த  போதும். அந்த 16 வயது பெண்ணின் குரலில் இருந்த சந்தோசம்  அழகாக இருந்தது. ரொம்ப சந்தோசம். 

Wednesday, October 21, 2009

உயிரணுச் சுவை

பல இரவுகளின் தேடல்
பெரும்பாலும் விடியலில் முடிந்துவிடுகிறது

எந்தத் தேடலும் இல்லாமல்
மறைந்து போன
ஒரு பெண்மையின் மெல்லிசை
என் போர்வைக்குள் மறைந்துள்ளது
ஒவ்வொரு இரவும்

வெந்து தணியும்
அடுக்களையின் சூட்டில்
அனைத்தையுமா அவித்து விட முடிகிறது

பரிமாறுதல் இல்லாப் பண்டமாய்
வெற்றுப் பிண்டமாய்
ஒவ்வொரு நாளும் சுவை
சேர்த்து வைத்துக் காத்திருக்கிறேன்

தவறும் ஒவ்வொரு நொடியும்
தவிப்பின் பேரமைதி யுகங்கள்

காத்திருத்தல்
பெருவெளியின் ஓரத்தில்
நிசப்தமாய் கண் சிமிட்டுகிறது

பதிந்து மறைந்து போன
நகக் குறிகள்
எதிரில் நின்று
நடந்து போன நிமிடங்களின்
பெயர்க்காரணம் சொல்கிறது

வழியும் உதட்டு ரத்தம்
நுனி நாக்கால் தடவிப் பார்க்க
உன் உயிரணுவின்
சுவையாய் உள் இறங்குகிறது

விரலழுத்தம் தாளா உடைகள்
தன்னால் வழிந்தோடி விடுகின்றன
கால்களின் நடுவே

கிழிக்கப்பட்ட தலையணைகள்
வாய் விட்டுச் சிரிக்கின்றன


மறுபடியும் விடிந்துவிடுகிறது
ஒவ்வொரு இரவும்

http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2154

உரையாடல்




வெகு இயல்பாகத்தான் தொடங்கியது
உனக்கும் எனக்குமான உரையாடல்

என் வீட்டுள் நுழைந்த ஒரு நிழல் மிருகம்
பற்றி நான் வர்ணித்ததை
மிகக் கவனத்துடன் நீ கேட்க ஆரம்பித்தாய்

என் ஜன்னல் வழி நுழைந்த
அந்த மிருகம்
என் இருப்பை ஆட் கொண்டதை
உன் கண்கள் விரிய கேட்டாய்

என் வரவேற்பு அறையில்
எனக்கு மிக அருகில் அமர்ந்து
அது நாளைய தினசரியை
வரி விடாமல் படித்தது என் கண் போகும் திசை எல்லாம்

நாற்காலியில் அமர்ந்த படியே
நான் உறங்கிப் போன நிமிடத்தில்
என்னுள் என் கருவறை வாசல்
தட்டித் திறக்காமல் உள் நுழைந்தே விட்டது

அதனுடன் கை பற்றி
என் சுவற்று சிலந்தியும்
கருவறை வாயிலில் கூடு கட்டிவிட்டது

என் படுக்கையறையில் ஒளிந்திருந்த
நாய்களின் கலவியின்
நேற்றைய மிச்சத்தில் உருவான
பருந்தொன்று தனியே

என் மார்பின் நடுவே சிறகடித்துக்
கொண்டிருக்கிறது

முலைக்காம்பில் வெடித்து சிதறும்
என் முதல் பால் சுவைக்க

நம் உரையாடலின் சுவை உணர்ந்த படியே

http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2154

Tuesday, October 13, 2009

முடியா பயணம்

நினைவுகளின் அழுத்தத்தில்
வெடித்து சிதறும் சில கவிதைகள்

என்றோ தலை கோதி
நீ சொன்ன கனவுகள் அலை அடித்து மோதும்

என் விரல் சொடக்கெடுத்து
அழுத்தம் குடுத்து என்னுள்
நீ பதியம் போட்ட எண்ணங்கள்
தன்னால் தலை அசைக்கும்

என்று தொடங்கியது
உனக்கும் எனக்குமான உரையாடல்

எனைக் கருவறையில் சுமக்கையில்
என்ன பேசினாய்
எனக்கான பாடல் கேட்டாயா
எனக்கான கவிதை படித்தாயா

எனக்காக நீ நடை பயின்றாயா
எதற்கான பதில் சொல்லவும்
நீ அருகில் இல்லை
எனினும் உன்னை உணர்கிறேன்

நான் கடந்து செல்லும்
ஒவ்வொரு கல்லிலும்
நீ பதித்த உணர்வுகள்
உன் பெயர் சொல்லி கதை சொல்கின்றன

உன் இமை மூடி
நீ நிரந்தர உறக்கம் தொடங்கிய
நிமிடம்
உன் அருகில் தலை வைத்து
சற்று உறங்க ஆசைப்பட்டேன்

அப்போது அது நடக்காமல்
போனாலும்
உன்னுடன் முடியா பயணம்
போய்க்கொண்டுதான் உள்ளேன்
நான் வாழும் ஒவ்வொரு நொடியும்

Tuesday, September 29, 2009

காற்றாய் கலந்தவன்


Sunday, September 13, 2009

கனவுகளின் காதலி

கனவுகளை சுவாசிப்பவள் நான்

கனவுகளின் வாசத்தில் வாழ்பவள் நான்
கரைந்து போன காற்றின் ஒலி ஒன்று
தானாய் சுமந்து போனது
என் கேவலை

வழியும் கண்ணீரின்
வற்றிப்போன நொடியொன்றில்
கனவொன்று கண்டேன்

கருப்பு பிரபஞ்சத்தின்
வெளியில்
கை நீட்டி வரம் கேட்டேன்
ஒற்றை சுடு நீர்
விரல் வழியே வழிந்தோடியது

சூழ்ந்த இருளின் நடுவே
திருவிழா ராட்டினமாய்
உன் நினைவுகள் வேகமாய்
சுற்றுகின்றன

நினைவு மரித்துப்போன
பிணம் ஒன்று
எரியும் சிதையின் மேல்
நர்த்தனமாய்

ஒவ்வொரு விடியலிலும்
உன் விரல் தீண்டும் நொடியில்
எனக்குள்
இந்த கனவு

Friday, August 28, 2009

சுய சரிதை

ஒற்றைத் தனிமையின் வெளியில்
தனியாய் திரிந்துகொண்டிருந்தது
பச்சை நிற சர்ப்பம் ஒன்று.

உரித்துப் போன சட்டை ஒன்று
மரப்புல்லில் சல்லாபித்துகொண்டிருக்கிறது

கூடல் முடிந்த பின்
கழற்றிபோட்ட ஆணுறை
போய்வந்த பயணம் பற்றி
சுய சரிதை எழுததொடங்கியுள்ளது

ஆணுறை தப்பிய சுயமைதுன
விந்தொன்று படுக்கையின் மத்தியில்
வீறுகொண்டு எழுந்து வீரியம் காட்டிய படி
பேயாட்டம் ஆடுகிறது

நிசப்தம் நிறைந்த மனதின் வெளியில்
ஒற்றைக்கண் மூடி
தியானம் தொடங்கியாகிவிட்டது

பெண்டாளும் உன் கோர முகம்
அருகில் கண்ட
இரவில்

எதிர் சுவற்று பல்லியோடு
என் கூடல் மிக திருப்தியோடு
உச்ச நிலை நோக்கி

Wednesday, July 1, 2009

என் கனவின் சாம்பல்


என் கனவுகள் அடுக்கிய
சிதையில் உன் கேள்விகள்
தீ வைத்து சென்றன.

ஒரு மதிய வேளையில்
கொளுத்தும் பகலின் உக்கிரத்தில்
எனை எரித்தேன் பதில் இல்லாமல்.

மெல்ல பற்றி எரியத் தொடங்கியது
என் இமையின் மயிர்.

கால் மடக்கி
கைகள் கட்டி மெதுவாய்
சத்தம் எழுப்பாமல் அடங்க ஆரம்பித்தேன்

எரியும் நெருப்பின் தாக்கத்தில்
அறையில் இருந்த நமது
திருமண புகைப்படம் உருகிக் கொண்டிருந்தது.

நேற்றுதான் கொண்டாடி கழட்டி
மாட்டி இருந்த மாலையின் வாசத்தில்
நெருப்பின் மணம் தனியே
அலைந்து தனித்திருந்தது.

என் கனவுகளின் நிறம் சற்றே
மங்க தொடங்கியது
உன் கனவுகளின் வெளிச்சத்தில்

கைக்குள் அடங்கிய என்
கனவுகளின் சாம்பல்
காற்றில் எங்கும் பறக்கத்தொடங்கியது

என்றாவது ஒரு நாள்
உன் காலடியில் மெத்தை விரிக்கும்
என் ஆசைகளின் படிமானம்.

Thursday, June 4, 2009

மழை நிறம்

நேற்றுதான் அந்த ஓவியம்
வரையத்தொடங்கினேன் இரவின் ஒளியில்

ஒவ்வொரு கோட்டின் முடிவிலும்
ஏதோ ஒரு கேள்வி
எனைப் பார்த்து கண் குத்தி நின்றது

ஒரு மாலை நேரத்து
உயிரின் உள் நனைத்த
ஒரு சாரலை கோட்டில் வரைந்துவிட நினைத்தேன்

மழையின் வண்ணம் வரைய
என்னுள் மிச்சமிருந்த
கடைசி சந்தோஷம் வழித்தெடுத்தேன்

தொடங்கிய நிமிடம் முதல்
என் விரல் வழியே
உதிரத்தொடங்கிய என் குருதி
இந்த நிமிடம் வரை தொடர்கிறது

இறுதியில் என் மழையின் நிறம்
சிவப்பாகிப்போனது
எனது விரல் அறியாமலே.....

Wednesday, April 29, 2009

காலங்கள் கடந்த பின் வரும்
ஒவ்வொரு அழைப்பிலும்
குத்தும் வலியாலான கரம் நீள்கிறது.

அதன் காரணம் புரியாத
மூளை அடுக்குகள் தனியே அலைகின்றன.

கரம் பற்றி நடந்த நாட்கள்
விரல் வழியே வழிகின்றது.

எண்கள் சில நேரங்களில்
எண்ணங்களின் கலவரத்துக்கு
காரணமாய் ஆகிவிடுகின்றன.

எண்ணங்களின் பின்னே போகும்
வாழ்வின் பதில்கள்
கேள்வி தேடி தன் போக்கில்

கட்டிலோடு கரைந்த உறவுகள்
தன் விதை தேடி புதிதாய்
உறவுப்பாலம் அமைக்க முன் நிற்கின்றன

முடிவு தேடித்தானே பயணம்
பின் எதற்கு கவிதையின் முடிவு