Thursday, January 24, 2008

கவிதை கடக்கும் கோப்பை

பருகி எச்சில் வைத்து மிச்சமாக்கப்படுகின்றன
கடந்து போன கவிதைகள்

அதனுள் மித‌க்கும் க‌ண்ணிழ‌ந்த‌ ஈ ஒன்று
கோப்பையின் ஓர‌த்தில் நின்று
துடுப்பு தேடுகிற‌து

தான் ப‌ருகிய‌ ஒற்றைத்துளியே
ச‌முத்திர‌மென‌
ம‌ய‌க்க‌ம் கொண்டு
பான‌த்தின் வ‌ண்ட‌ல் குறையென்கிற‌து

தொலைதூர‌ விழி மூல‌ம்
கிட்ட‌ப்பார்வை பார்த்த‌ப‌டி

த‌ன் தோணி க‌ட‌க்கும்
மாயை அறியாத‌து அது

அருகில் செல்லும் க‌ப்ப‌லின்
க‌ட‌ல் மித‌க்கும் வித்தை
க‌ற்றுக்கொடுக்க‌ கையில்
கோல் எடுக்கிற‌து

எடுக்கும் கோலுக்கு ஆடும் ம‌ந்தியென‌
என் க‌விதை நினைத்து...

அது அறியாதது

கையிடுக்கின் வழி மெல்ல கசியும்
புகையாய் கவிதை

அந்திவான் நோக்கி திசையற்று
உலகை அணைத்து
பறக்கும் சேதி

பிர‌ச‌வ‌ங்க‌ள்

நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது
க‌விதைப் பிர‌ச‌வ‌ங்க‌ள்

சில‌ சுக‌மாய் சில‌ குறையாய்

ர‌த்த‌ம் காணா சிசு வெளியே வ‌ருவ‌தில்லை
எத்துணை கால‌மாயினும்

உல‌க‌ம் காணும் வேக‌ம் இருப்பினும்
சில‌ ச‌ம‌ய‌ம் உள்நின்று செல்ல‌மாய்
இர‌ட்டைப் பிர‌ச‌வ‌த்துக்காய்
அட‌ம் பிடிப்ப‌வை சில‌

வெளியில் எடுத்து
த‌லை க‌விழ்த்து முதுகு த‌ட்டிய‌பின்
க‌ண் சொருகி
ம‌ரித்த‌வை சில‌

உயிர‌ற்று ஜ‌ட‌மாய்
மெல்ல‌ சுவாசித்து
தாதியின் கைசூட்டில்
த‌ன் உயிர்சூட்சும‌ம் தேடி
வெளிவ‌ந்த‌வை சில‌

புதிதாய் முளைத்த‌
சின்ன‌ஞ்சிறு கை கால்க‌ளுட‌ன்
ப‌னிக்குட‌ நீரில் மித‌ந்த‌ப‌டி
த‌ன் நேர‌த்துக்காய்
காத்திருப்ப‌வை சில‌

எனினும் நித்த‌மும்
நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது
க‌விதைப் பிர‌ச‌வ‌ங்க‌ள்

கவிதைப்பயணி

எடுப்பார் கைப்பிள்ளையாய் சிறு சிணுங்கலுடன்
தனது பயணத்தின் இலக்கு நோக்கி
புகைவிட்டபடி போய்க்கொண்டிருக்கிறது
வார்த்தைப் பெட்டி.

நகர்ந்து போன கள்ளிச்செடியொன்றின்
அரும்பொன்று மொட்டவிழ்த்து
தலை அசைக்கிறது தாண்டிப்போன காற்றுக்கு
முத்தமிட்டு

தூர நின்ற ஒற்றைப் பனைமரம்
தனது கள்ளை இறக்கி வைத்து
எதிர்நோக்கி நிற்கிறது
வார்த்தை போதைக்காய்.

பனைக்கள் நக்கி
மகரந்த சேர்க்கை மறந்து
தள்ளாடி
மலர் மலராய் தாவிச் செல்கிறது
திசை மறந்த வண்ணத்துப்பூச்சியொன்று

சிரித்து வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருக்கிறது
என் சொல் அமர்ந்த
அரளிப்பூவொன்று..

அதனோடு சேர்ந்து காயும்
காத்திருக்கிறது
தனை பறிக்கும் வளைக்கையொன்றுக்காய்

எனக்கான‌ கேள்விகள்

விரல் நீட்டப்படுகிறது
சுற்றும் சக்கரம் கையில் ஏந்தி
உதிர்ந்த வார்த்தைகள்
கவனமாக சரம் கோர்க்கப்படுகின்றன.

மயிலிறகு சொருகி
கண்முன்னே வலம் வருகின்றன
வாளேந்திய கேள்விகள்

வளைந்து நெளிந்து புற்று நோக்கி
வடிவம் எடுத்து போகின்றன.

நெடிதுயர்ந்த நீல நிறம்
ஆலகால விஷம் உண்டு
பொலிவு பெறுகிறது.

நடப்பவை நன்மைக்கே என
உபதேசம் செய்து
இதழ்கோடியில் விஷமப் புன்னகையுடன்
துயில் விழிக்கிறது
சுற்றும் உலகின் விட்டம் அளக்க

உண்மை உணர்ந்து
இயலாமையுடன்
கண் மூடித் தொடங்குகிறது

மோன தவம் மரத்தடியில்

எதிர்வரும்
வேட்டுவ அம்பு நோக்கி

Wednesday, January 23, 2008

என் காதல் காடு

இறுகும் இதய வட்டத்தின் நடுவில்
எரியும் தணலாய் நீ
வெந்து தணியும் என் காமக்கூட்டில்
முதல் தீயை வைத்துவிட்டு
கண் சிமிட்டியவாறே தூரத் தெரியும்
மலைப் பள்ளத்தாக்கினுள் சென்று மறைந்தாய்

தொடரும் நெருப்பில்
கருகும் சிட்டுக்குருவியின் இறகாய்
என் காதல் காடு
உனக்கான பூங்கொத்தோடு ம‌ட்டும்
காத்துக்கொண்டு இருக்கிற‌து மிச்ச‌மான‌ வ‌லியோடு

கான‌க‌த்தின் ந‌டுவில் ஓர் ஒற்றைக்குர‌ல்
தின‌ந்தோறும் பாடுகிற‌து
கேட்ப‌வ‌ர் இல்லாம‌ல்

க‌ட்டிய‌ணைத்து முத்த‌ம‌ழை பொழிந்து
சூடு த‌ணிவித்த‌ என் உட‌ல்கூடு
த‌ன்னைத்தானே கொளுத்திக்கொள்கிற‌து

த‌ன் ர‌த்த‌ம் சுவைக்கும்
ப‌சித்த‌ நாயாய்

Friday, January 18, 2008

சொல்லியிருக்கலாமோ

எல்லாம் நன்றாகத்தான் இருந்தது

உனது நினைவாக நானும்
எனது செயலாக நீயும்
பயணித்தபோதும்

கைகோர்க்காமல் விலகி
மனம் கோர்த்து
நடைபயின்றபோதும்

இமை தட்டிய உறக்கம்
வேடிக்கை பார்த்தபடி
பேசிச் சலித்தபோதும்

எல்லாம் நன்றாகத்தான் இருந்தது

உதடு வரை வந்து
உள் சென்ற‌
உனக்கான என் வார்த்தை
குரல்வளை நெரிக்கும் வரை

Thursday, January 17, 2008

பயணத்தின் ஊடே

முகம் தெரியா தூரத்திலும்
உள்ளம் உணரும் உணர்வுகள்
அனைத்தையும் சொல்லிவிட முடியா தவிப்புடன்
நகரும் ரயில் பயணமாய் வாழ்க்கை...

ஒவ்வொரு திருப்ப‌த்திலும்
ஜ‌ன்ன‌லோர‌மாய் தெரியும்

விழிக‌ள் தோறும் க‌ன‌வுக‌ள்
நீளும் தண்டவாளத்தில் தொலைக்கப்பட்ட‌உறவுகள்...

விடியும் காலை எனக்கானதான நம்பிக்கை

என் விரல் தேடி கோர்க்கும்
நட்பின் கரங்கள்...
கனவின் விழிப்பில் தினமும் நிகழும்
சந்திப்பின் பிம்பங்கள்...

பிம்பங்கள் கலையும் நிமிடங்கள்

அடுத்த ரயிலின் துவக்கம்.....

Tuesday, January 8, 2008

தனிமை விருந்தாளி

என் முன் விழும்
நிழல் துரத்தி வேகமாய் ஓடினேன்
உயிர்ப்பையில் காற்று தேக்கி
நிமிர்ந்து பார்த்தேன்
நிழலைக் காணவில்லை...

வென்ற களிப்புடன் பின் திரும்ப
எனைத் துரத்தும் மிருகம்
தரையில் நெளியும்.

வீடு வந்து சேர்ந்தேன்
உடலில் மேய்ந்த புழுக்களை உதறி..

எனக்கும் முன்
என் தனிமை விருந்தாளி
தலைவாழை இலை விரித்து
உணவாய் எனை உண்டபடி

எனை நோக்கி தன்
கோரப்பல் நீட்டும்.

மழுங்கடிக்கப்பட்ட என் தேவதை

அணைக்க நீளும் கைகள்
வெட்டப்பட்டிருக்கின்றன.
கனிவு பொழியும் கண்கள்
குருடாக்கப்பட்டிருக்கின்றன.
என் தோட்டம் அளக்கும்
கால் விரல்களின் நகங்கள்
பிடுங்கப்பட்டிருக்கின்றன.

சபிக்கப்பட்ட
என் தேவதையின் தலையும்
என் தேவனின் ஆண்மையும்
மழுங்க வழிக்கப்பட்டிருக்கின்றன

சாணை பிடிக்கப்படாத
ஒரே கத்தியினால்....

Thursday, January 3, 2008

சிலுவை ஏந்தும் கருவறை

உன் வீழ்ச்சியை என் முதுகில் ஏற்றி
சிலுவைக் கூடு சுமந்து பயணிக்கிறேன்
மெல்ல நகரும் நத்தையாய்
என் ஓடுடைக்கும்
கரம் தேடி
பாலைவன மணலின் சூட்டில்...
ஏந்தும் கரம் தோறும்
இது இறுதி எனும்
நம்பிக்கை கதகதப்பின் சுகம்
எனினும் பயணம் தொடர்கிறது
நெடுந்தொலைவு சூரியன்
உதிக்கும் திசை தேடி...

Wednesday, January 2, 2008

நாமும் அவனும்

சபிக்கப்பட்ட பழங்களின் மர நிழலில்
கால் நீட்டி அமர்ந்திருந்தோம்
ஒருவரையொருவர் அணைத்தபடி
வெற்று உடலாய்
மௌனமாய்
நமைப் பற்றி ஏதும் அறியாமல்
எந்த கேள்வியும் எழாமல்

தூர நின்று பார்த்த ஆதாம்
வேகமாய் அருகில் வந்தான்..
தன் ஆண்மையை நம்முள் பதிவு செய்வதற்காய்

அவன் குறி
நேற்றுப் பிறந்ததைப் போல சுருங்கிப் போனது
நம்மின் வெப்ப மூச்சில்....

என் நீ

பிணைந்து கிடக்கிறது
நம் புணர்வின் மிருகம்!
வழியும் வேர்வையை
துடைக்கும் நம் உடலின் வெப்பம்...
ஆதாம் இல்லாத
ஏதேன் தோட்டம் நோக்கிய
நம் பாதையில்
கலந்திருந்த நம் பெண்மைகள்....

உறையும் என் இரத்தம்

உனக்கான கோப்பையில்
வடியும் என் இரத்தம்
சிறிது சிறிதாக
சேமிக்கப்படுகிறது ஒவ்வொரு நொடியும்...
நீளும் உன் இரட்டை நாக்குகளில்
அதன் சூடு
உறைக்கும் வண்ணம்
தன்னைத்தானே கொதிக்க வைத்துக்கொள்கிறது..