Tuesday, December 14, 2010

மீண்டும் நான்

மிக நீண்ட நாட்களுக்கு பின்னான ஒரு பதிவு. நேரமின்மை, தனிப்பட்ட பல காரணங்கள் எழுத்து என்னை தனிமைப் படுத்தி சென்று விட்டது, அதில் இருந்து மீண்டு மீண்டும் எழுத முயற்சித்துள்ளேன்,. பார்ப்போம் இது எத்துனை நாட்கள் தொடர்கிறதென்பதை. :)

வார்த்தை தேடும் முகவரிகள்





உன் முகவரியில் சேர இயலாமல்
சேர்க்க முடியாமல்
திரும்பி விட்ட
கடிதங்கள் அவை

வெற்றுக் கடிதங்களுடைய வார்த்தைகள்
தானே உருப்பெறுகின்றன
எந்த வித உரிமையும் உறவும் கொள்ளாமல்
நமக்கிடையே அவை கிடந்து
தவிக்கின்றன


வார்த்தைகள் அவைகளாகவே வாழ்ந்து
விடுவதில்லை
அவை உருப்பெறுகின்றன
உயிர்பெற்று


கடந்த நாட்களின் வலிகள்
காதலின் ரணங்கள்
காமத்தின் காயங்கள்
இவை மட்டுமே கொண்டு அவை
தங்களுக்குள் உரையாடிக் கொள்கின்றன

முகங்கள் மறந்து இந்த தெருவில்
அவை உனக்காக காத்திருந்தன

வேகமாக நகரும் மனிதர்களின்
சுவாசக் காற்றில் அடையாளம் தேடி
ஒவ்வொரு சுவாசத்தினையும்
அடைகாத்திருக்கிறது
வேனிற் காலக்காற்று

கடந்து போன ஒவ்வொரு காலடிகளும்
ஏதோ ஒரு விதத்தில்
பிரிவினை பலமாய் அழுந்த
சொல்லிக் கொண்டிருந்தன


ஒரு வெய்யில் காலத்தில்
முடிவானது நம் பிரிவு
அந்த நொடியில் முதல் வார்த்தை
கடிதத்தில் பதிந்தது - அது மட்டும் அல்ல
முதல் வலியும் பதிந்தது
ஞாபகத்தில் இருந்து


எங்காவது காத்திருக்கும் என் கடிதம்
உனக்காகவென நான்
அகழ்ந்தெடுத்த வார்த்தைகள் தாங்கி
தங்களுக்குள் விவாதம் நிகழ்த்திக்கொண்டு

உரையாடல்கள் தீரும் வேளையில்
அவை முகவரி தேடிக்
கிளம்புகின்றன

அடைய முடியா தூரத்தில்
உனக்கென ஒரு கூட்டை
நீ தேடிக் கொள்கிறாய்
நான் அறிய முடியாதென நம்பி

நம்பிக்கைதானே நம்முள் எல்லாமே !!!!