விருதிற்கு நன்றி பத்மா (http://kakithaoodam.blogspot.com/)
இன்னும் பலருடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என நினைக்கிறேன். அவர்களுடன் மீண்டும் அடுத்த பதிவில். :)
Tuesday, March 30, 2010
Tuesday, March 23, 2010
சிவமெரிக்கும் நான்
வடுவாய் நிற்கிறது
வாழ்ந்து கழிந்த வாழ்க்கை
தொடரத் துடிக்கும் கால்களை
வெட்டிப் போடுகிறது
நிதர்சனம்
எனை மறைத்து தான் மட்டும்
நான் போல் போகிறது
என் நிழல்
வலியுடனே வாழ்கிறேன்
சுகமாய் இருப்பதாய்ச்
சொல்லிக் கொள்கிறேன்
எனக்கு நானே
எனை நானே கொல்கிறேன்
அனைத்தும் மறந்து விட்டதாய்
அல்லது மறைந்துவிட்டதாய்
மண் குழைத்து எனைச் சுற்றி
சுவர் எழுப்புகிறேன்
கால்கள் மறைத்து மேல் எழும்புகிறது
செங்கற்கள் கொண்டு கட்டிடம்
தனைக்கட்டிக் கொள்கிறது
சுவர் எங்கும் நீ விசிறி விட்டுப் போன
இரத்தத் தெறிப்புகள்
என் மேகம் எங்கும் மின்னல் தெறித்து
என் உடல் எரிக்கிறது
என் காலின் கீழே
சிவமெரித்துக் கிடத்தி இருக்கிறேன்
நானே வானாய்
மாறிப் போன நிமிடத்தில்
எனக்கு ஆயிரம் கைகள் முளைத்தது
ஒவ்வொரு விரலிலும்
ஆயிரம் சிசுக்கள்
உதிரம் குடித்தபடி
நண்பகலில் மிளகாய் அரைத்து
உள்ளங்காலில் பூசி
ஒப்பனைகள் தொடர்கிறேன்
காயங்கள் காயும் முன்
நெருப்பெடுத்து அப்பிக் கொள்கிறேன்
கட்டிடம் முடியும் தருணம்
நானே கல்லாய் மாறிப் போகிறேன்
மனிதம் தேடி தவம் தொடர்கிறது
மறுபடி ஒரு பயணம்
நிகழ் காலங்கள் நிஜம்
போலத் திரிகின்றன
கடந்து வந்தவை காணாமல்
போய் விட்டதாய்
ஒரு உணர்வு
இன்றிருப்பது மட்டுமே இன்றாகிப் போகிறது
ஏதோ ஒரு காட்டுக்குள்
கட்டவிழ்ந்து கிடக்கிறேன்
பயணங்களின் முடிவு தேடி
நடந்து கொண்டே இருக்கிறது நேரம்
உடன் நடக்கும் பாதச் சுவடு
மறந்து பாதை மாறி நடக்கிறேன்
எங்கோ சிதறும் ஒரு துளி நீரின்
சத்தத்துக்காக
ஒவ்வொரு நாளும் புதிதாய்ப்
பிறக்கிறேன்
மறுபடி ஒரு பயணத்துக்காக
நீர்த்துப் போன வாழ்வில்
சாரல் அடித்து
வெடித்துத் திறக்கிறது
என் பாலை
வெளியெங்கும் விரவிக் கிடக்கிறது
எப்போதோ சிந்திப் போன
புணர்ச்சியின் மிச்சங்கள்
அணைத்துப் போன தடங்கள்
தடுமாற்றத்துடன்
நிகழ்ந்ததைச் சொல்கிறது
என் இரவுக் கதைகளில்
தொடங்கும் இடம் தேடி
அலைகிறது மறந்து போன
காதலின் எச்சங்களை
மனம்
ஏன் வந்ததென்று தெரியாமல்
வந்து விட்டு போகிறது
ஒவ்வொரு இரவுகளிலும்
நேற்றின் ஆழ் முத்தங்கள்
நீளும் பயணம்
நீண்டு கொண்டே இருக்கிறது
மேலும் மேலும்
இன்னும் இன்னும்
மறுபடி ஒரு பயணத்துக்காய்
நான்
Thursday, March 4, 2010
நெரிக்கும் இழப்பு
சிநேகிதிகளின் வீடுகளுக்கு செல்வதில்
பெரும் தயக்கம் வருகிறது
இப்போதெல்லாம்
வார விடுமுறை நாட்களின் மேல்
கோபம் வருவதைத்
தவிர்க்க முடியவில்லை
இயல்பாகக் கூட
அவர்களின் கணவர்களை பற்றி
விசாரிக்க இயல்வதில்லை
"நன்றாக இருக்கிறாயா" என்பதுடன்
கேள்விகள் முடிந்து விடுகிறது
தோழி ஒருத்தியின்
குழந்தைப் பேறு பற்றி
இன்னொரு தோழியின் மூலம் மட்டுமே
தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது
சிநேகிதிகளின் வீடுகளில்
வரவேற்பறை தாண்டி
பாயும் கண்களை மிகவும்
சிரமப்பட்டு அடக்க வேண்டியுள்ளது
சாதாரணமாக பகிர்ந்து கொண்டிருந்த
காதல்களும் காமங்களும்
திடீரென தனிமை சாயம்
பூசிக்கொண்டுள்ளது
வார்த்தைகள் மாறி
கண் ஜாடைகள்
அதிகம் பரிமாறுகிறது
மூடப் பட்ட கதவுகளின் பின்னால்
இயல்பாய் இருக்க நடித்தல்
கழுத்தை நெரிக்கிறது
கணவனை இழத்தல் அத்துணை பாவமா?
உயிரோடோ அல்லது இல்லாமலோ!!!
வீழும் நினைவுகள்
வாழ்வின் விளிம்பில்
ஒட்டிக் கொண்டிருக்கிறது
வெறுமையின் கணங்கள்
நகர்ந்து கொண்டிருக்கும்
பேருந்து ஜன்னல்களில்
நம் நேரங்கள் காற்றில்
சலசலத்துக் கொண்டிருக்கிறது
திருமண மண்டபத்தின் சத்தத்தில்
மௌனக் கேவல்கள்
கரைந்து போய்க் கொண்டிருக்கிறது
பரிமாறப்பட்ட பந்தியில்
உணவோடு சேர்த்து
உணர்வுகளும் அனைத்தும்
வீணடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது
மாற்றப்படும் மாலைகளில்
கசங்கிப் போயுள்ளது
மறந்து போன சிலவும்
மறந்தே ஆகவேண்டிய பலவும்
சுற்றி நிற்கும் உறவுகளில்
உன்னைத் தேடிக் கொண்டுதான் உள்ளது
வாய் விட்டு சொல்ல முடியாத
நம் நினைவுகள்
விழுந்து கொண்டிருக்கிறேன்
விரல் பற்ற முடியாத ஆழத்தில்
விடை தெரியா வினாக்கள் சூழ்ந்த
அந்த காரத்தில்
எழ முடியாத ஆழம் எனினும்
உனக்காக ஆனதினால்
காதலுடன் சரிகிறேன்
எப்போதும் போல்
Subscribe to:
Posts (Atom)