Saturday, April 30, 2011

நீர்க்குட காகம்





















மிக நீண்டதொரு பயணத்திற்கு
பின்னான பொழுதுகளில் உன் காமம்
கட்டுக்கடங்காமல்  என் மேல் உன்னை
விசிறி இருப்பாய்.

உன் இருப்பை நான் உணரும் முன்னமே
உன் பிறிதொரு பயணத்தையும்
தொடங்கி விடுவாய்.

உன் இருத்தலும் இறுத்தலுமாய்
காதல் வாழ்ந்து கொண்டிருப்பதை
மற்றொரு நாளில்
பாட்டி கதை சொன்ன நாட்களில் சொன்னாய்.

காயத் தொடங்கிய நுனி இலையின் 
ஒற்றை நரம்பில்  ஒரு சிலந்தி
மாளிகை கட்டிகொண்டிருப்பதை சொல்லி
உன்னை தடுத்து 
காட்ட விரும்பினேன்.

அசுர சிரிப்பொன்றில்
அதனை அறுத்தெறிந்து விலகி செல்கிறாய்.

பாறையின் மறைவொன்றில்
ஒரு இரவில் கதை சொல்லத் தொடங்கினாய்.
கதையின் நடுவில்
கேள்விகள் வைத்தாய். 
பதிலாய் என் ஆடை அவிழ்த்தாய்.

நெகிழும் ஆடையில்
விரல் வைத்து பிரித்து
கேள்விகளால் பிணைத்தாய்.

 நீர்க்குட காகமாய்
கேள்விகளும் பதில்களுமாய்
உனை நிறைத்துக் கொண்டாய்.

என்னுள் உன்னை ஊற்றினாய்
இல்லை
ஊற்றியதாய் எனை நம்ப வைத்தாய்.

நம்பிக்கையின் முடிவில்  
சட்டென எழுந்து
பாறையில்
தேய்த்துக் கொண்டு
மறுபடி பயணம் தொடங்கினாய்.

நிலவொளி ஆடை
உடுத்திக் கிடக்கிறேன்
சூழும் இரவின் கரங்களில்.

கேள்விகளும் பதில்களும்
பின்னி கிடக்கின்றன
என் அருகில்.

தாகம் தீராக் காளியாய்  நான் !!!

Wednesday, January 5, 2011

கரையா(ய்) நினைவுகள்













நம்பிக்கையில்தானே தொடங்கியது
அனைத்தும் ஆம் அனைத்தும்

ஒரு நொடியினில் மாறிப்போனது

இரவுகளின் நிசப்தத்தில்
அவசரமாய் எனைத் தட்டி எழுப்புகிறான்
மேலெழுந்த காமத்தின்
வேகம் தாங்காமல்

தேவை தீர்க்கும் முயக்கத்தில்
எந்த வித அலுப்பும் அவனுக்கும் இருப்பதில்லை
எனக்கும் இருப்பதில்லை

அணைக்கப்படும் விளக்குகளும்
நானும்
ஒன்றாய்த்தான் இருக்கிறோம் இந்த 
படுக்கை அறையை பொறுத்தவரை

இரவுகளில் அவனுக்கு  தேவை
இருந்தால் மட்டுமே
எழுப்பப் படுகிறோம்

வெற்று அணைப்பில்
வெந்துகொண்டுதான் இருக்கிறேன்

வேகமாய் இதழ் தேடி
பொருத்தி உணரும் முன் விலகிப் போகிறான்

காமம்  கலைந்து போனதும்
நானும் களைந்து போகிறேன்
அவனைப்  பொறுத்த வரையினில்

மகிழ்ச்சி பெருக்கினால் வடிந்த
கண்ணீர் இன்னமும்
மனதின் ஓரத்தினில் இனிக்கிறது
பதின்மத்தின் வரப்புகளில்

விலகுதல் இயல்பாய் நடந்தது உனக்கு
நீ தொட்டதும் நான் சுருங்கி விரிந்த
தொட்டாற்சிணுங்கி   நொடிப் பொழுதினில்
விலகிப் போய்விட்டாய்
விரலை ஊதிக்கொண்டு

என் சிலிர்ப்பு அதோ
உன் விரல்களில் ஒளிந்து கொண்டுதான்
இருக்கிறது

மகரந்த சேர்க்கைகளுக்காக
நான் மலர்ந்த நிமிடங்கள்
ஒவ்வொன்றும்
அமிலம் ஊற்றி மூடியதாய்
மாற்றிபோனது ஏன்

இதோ அருகில்தான் இருக்கிறான்
கண் மூடி நான் கனா கண்ட
நேரத்தில்
என் கனவுக்குள் வந்து விட்டதாய்
நம்பிக்கொண்டு

என் இரவுகள் வருவதே உனக்கென்பதை
உணராமல்

என்னுள் கரைந்து ஊற்றிய
உன்னை சுவைத்துக் கொண்டு
புத்தகத்தின் மயிலிறகாய்
உன்னை ஒளித்து வைத்துள்ளேன்
என்றாவது உன்னை மீட்டெடுப்பேன்
என்ற நம்பிக்கையில்

என்றோ என்னுள் மகிழ்ந்து போன
நீ மீண்டெழுந்து வா
மறுபடியும் முகிழ்ந்து போக

தவறும் தருணங்களில்
தவமிருக்கிறேன்
என் ஆடையில் கரையாய்
மிச்சமிருக்கும் உன் நினைவுகளை
பற்றியபடி !!!!

உறக்கம் கலைத்து  தயவு செய்து
எழுந்து விடேன் !!!!!