Thursday, December 3, 2009

கனவுக்குள் கனவாய்

ஒவ்வொரு புணர்தலின்
முடிவிலும் உனக்கு திருப்தியா
என்ற கேள்வியோடு ஆடை புனையத்
தொடங்குகிறேன்

என்னின் உச்சம் உணர்ந்ததில்லை
நான்
அதற்கான கேள்வியும் உன்னுள்
வந்ததில்லை

உடை களைதலில் நீ காட்டும்
அவசரம் ஒவ்வொரு வேளையிலும்
ஒரு கேள்வியாக மட்டுமே நின்று போயிருந்தது 

இரவுகள் இன்னுமொரு
நரகமாக மாறத் தொடங்கிய
நாட்களின் இறுதியில்
அவன் புதியதாய்
பூக்கத்தொடங்கினான்

என் பாடல்கள் அவனுக்காய்
புது சுவரம் கோர்க்கத் தொடங்கின

என் உடைகளின் நிறம்
அவனுக்குரியதாய் வர்ணம் பூசின

என் படுக்கை விரிப்புகளின்
பூக்கள் புது மணத்துடன்
விரியத்தொடங்கின

மலராத என் வீட்டுத் தோட்டத்தின்
நடுவே நின்று
பூத் தொடுத்தேன்

வாடும் முன் அள்ளியெடுத்து
அவன் அணைப்பதாய்
கனவுகள் கண்டேன்

அவன் என்னை மெதுவாய்
மிக மெதுவாய்
ஸ்வரம் பிரிக்கத் தொடங்குகிறான்

என் விரல்கள் அவன் தொடலுக்காய்
ஏங்கி மருதாணி சாயம்
பூசியது

என் வருகையை அவனுக்கு
அறிவிக்க மட்டுமே
கால்கள் கொலுசணிந்து
நடக்கத் தொடங்கியது

மறுபடியும் விடிந்து விட்டது
என் கனவுக்குள் சென்று
உறங்கத் தொடங்கி விட்டான் அவன்

10 comments:

லெமூரியன்... said...

ஆத்தீ........பட்டையை கிளப்புறீங்க......!
வெளிப் படுத்த முடியா கேள்விகளும் வலிகளும்....

வாரியணைக்கும் கனவுகளே ஆறுதலாக...!

Cable சங்கர் said...

ஆரம்ப வரிகளில்தான் எவ்வளவு நிதர்சன வலி..:((

Mohan R said...

That was amazing... Very nice use of words... Kanavu kadhalargal nijam aanal valkkai nalla thaan irukkum :(

பா.ராஜாராம் said...

மௌனம் மெல்ல உடையும்.தாங்க இயலாது அதன் ஜீவிதம்.

மற்றொரு உலுக்கல்!

sathishsangkavi.blogspot.com said...

//என் உடைகளின் நிறம்
அவனுக்குரியதாய் வர்ணம் பூசின

என் படுக்கை விரிப்புகளின்
பூக்கள் புது மணத்துடன்
விரியத்தொடங்கின

மலராத என் வீட்டுத் தோட்டத்தின்
நடுவே நின்று
பூத் தொடுத்தேன்//

வாவ்.............

ஒவ்வொரு வரியும்
பின்னிஎடுத்துட்டீங்க போங்க..............

Thamizhan said...

சுவை கூட்ட வழியுண்டு
குறை தீர்த்து வாழ
வெட்கமும் அசிங்கமும்
படுக்கையறை வெளியே
வீசியபின் காண்பது
முடிவிலா இன்பம்
கனவல்ல நனவேதான்
காண்பதுதான் வாழ்க்கை!

பூங்குன்றன்.வே said...

வலியை கூட இவ்வளவு அழகாக எழுத முடியுமா? ஆச்சர்யமாக இருக்கிறது.மிக அருமை.

தோழி said...

நன்றி லெமூரியன், சங்கர், இவண்

தோழி said...

நன்றி ராஜாராம். உங்களது புத்தகத்திற்கு வாழ்த்துக்கள். ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்

தோழி said...

மிக்க நன்றி சங்கவி, தமிழன், பூங்குன்றன்

:)