Saturday, February 2, 2008

கனவில் நீந்தும் கள்வன்

கனவுகள் உதிரத்துவங்கும் ஒரு காலையில்
ஒரு வண்ணத்துப்பூச்சியின்
கூட்டுக்குள் ஒரு கள்வனைப் போல்
நுழைந்தான்
என் நேற்றின் மிச்சமானவன்

என் மூச்சின் உச்சத்தின்
ரகசியம் புரிந்து
என்னை அள்ளி வெளியே வீசி
தன்னை என்னுள் நிரப்பினான்.

நீண்ட மரங்கள் அடர்ந்த
ஒரு பனிச் சாலையில்
மெல்ல நடுங்கும் என் கைப்பிடித்து
அழைத்துச் செல்கிறான்.

ஒற்றை விளக்கெரியும்
இருட்டுப் புள்ளியின் திசை நோக்கிப்
பயணம் புரிகிறோம்

ஒருவரோடு ஒருவர் பேசாமல்

என் கூடு தானே தன்னை
கிழித்துக் கொள்ள வாயிலில் காத்திருக்கிறது

உதிக்கும் சூரியன் பரப்பும்
செவ்விள காலை எனக்குள் விரிய‌

என் பனி மெல்ல உருகி முத்தாக‌
ஊர்வலத்துக்காய்
ஏந்தும் தோளுக்காய் பசியுடன்...


இமை மீறி நீந்தும் நீருடன்...

No comments: