Tuesday, December 14, 2010

வார்த்தை தேடும் முகவரிகள்





உன் முகவரியில் சேர இயலாமல்
சேர்க்க முடியாமல்
திரும்பி விட்ட
கடிதங்கள் அவை

வெற்றுக் கடிதங்களுடைய வார்த்தைகள்
தானே உருப்பெறுகின்றன
எந்த வித உரிமையும் உறவும் கொள்ளாமல்
நமக்கிடையே அவை கிடந்து
தவிக்கின்றன


வார்த்தைகள் அவைகளாகவே வாழ்ந்து
விடுவதில்லை
அவை உருப்பெறுகின்றன
உயிர்பெற்று


கடந்த நாட்களின் வலிகள்
காதலின் ரணங்கள்
காமத்தின் காயங்கள்
இவை மட்டுமே கொண்டு அவை
தங்களுக்குள் உரையாடிக் கொள்கின்றன

முகங்கள் மறந்து இந்த தெருவில்
அவை உனக்காக காத்திருந்தன

வேகமாக நகரும் மனிதர்களின்
சுவாசக் காற்றில் அடையாளம் தேடி
ஒவ்வொரு சுவாசத்தினையும்
அடைகாத்திருக்கிறது
வேனிற் காலக்காற்று

கடந்து போன ஒவ்வொரு காலடிகளும்
ஏதோ ஒரு விதத்தில்
பிரிவினை பலமாய் அழுந்த
சொல்லிக் கொண்டிருந்தன


ஒரு வெய்யில் காலத்தில்
முடிவானது நம் பிரிவு
அந்த நொடியில் முதல் வார்த்தை
கடிதத்தில் பதிந்தது - அது மட்டும் அல்ல
முதல் வலியும் பதிந்தது
ஞாபகத்தில் இருந்து


எங்காவது காத்திருக்கும் என் கடிதம்
உனக்காகவென நான்
அகழ்ந்தெடுத்த வார்த்தைகள் தாங்கி
தங்களுக்குள் விவாதம் நிகழ்த்திக்கொண்டு

உரையாடல்கள் தீரும் வேளையில்
அவை முகவரி தேடிக்
கிளம்புகின்றன

அடைய முடியா தூரத்தில்
உனக்கென ஒரு கூட்டை
நீ தேடிக் கொள்கிறாய்
நான் அறிய முடியாதென நம்பி

நம்பிக்கைதானே நம்முள் எல்லாமே !!!!

Saturday, July 31, 2010

உயிர்த்தெழுதல்














இருட்டின் மத்தியில் நடந்து கொண்டிருக்கிறோம்
மெல்லிய இசை சுற்றிலும் அடர்ந்திருக்கிறது

நேற்றிரவு தொடங்கிய பயணம் அது
மரங்கள் பேசும் ஓசை மட்டும் கேட்டபடி
நகர்ந்து கொண்டிருக்கிறோம்
எங்களின் நிழல்களோடு

சுற்றிலும் இரவின் இசை
வழி நடத்திக் கொண்டிருக்கிறது எங்களை

அமைதியின் கணம் தாங்க இயலாத
நொடியில் தீர்மானித்தோம்
இறந்து போவதென்று


எடுத்த முடிவின் படி
ஒருவர் இன்னொருவரை
உண்ணத் தொடங்கினோம்


பயணத்தின் முதல் நொடி போல
கைகளில் இருந்து
தொடங்கினோம்

விரல் இழந்த உள்ளங்கைகளில்
மெல்லியதாய் முத்தங்கள் பரிமாறிக்கொண்டோம்

மிச்சமிருந்த காதல் பிடுங்கி
கிளைகளில் மாட்டி வைத்தோம்
அடையாளத்திற்காக  


இன்னும் பேச்சுத் தொடங்கியாக வில்லை

திடீரென உணர்ந்தோம்
பின் வந்த நிழல் காணாமல் போனதை

பல காதலின் சாயல்
இதயத்தின் உள் புகுதலை உணர்ந்தோம்
தள்ளி நின்று வேடிக்கை பார்த்தோம்

சட்டென மரத்தின் கிளைகளில் இருந்து
நாங்கள் இறங்கிப் போவதை பார்த்தோம்
கடந்து வந்த வழியில்

எனினும் பயணம் முடியவில்லை
கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேறுகிறது
எங்களின் உண்ணுதலும்
உண்ணுதலின் நடுவே நடையும்


மீண்டும் எங்கள் படுக்கையில்
நாங்கள் உயிர்த்தெழுந்தோம்
விரல் இல்லா உள்ளங்கைகளோடு

Friday, May 28, 2010

முதல் காதல் கடிதம்

இன்று மாலைதான் வந்து சேர்ந்திருந்தது
எனக்கான முதல் காதல் கடிதம்

எப்போதோ எங்கிருந்தோ அனுப்பப்பட்டு
இப்போதுதான் வந்திருக்கிறது
என் கனவின் முதல் படி
நிறைய பறவைகளின் சத்தங்களுக்கிடையில்
அதைத் திறக்கிறேன்

முதல் சில வரிகள்
வண்ணங்கள் நிறைந்தவையாய்
மாறிப் போயிருக்கிறது
என் தோட்டத்தின் பூக்களுள்
சென்று மறைகின்றன

மெல்ல மெல்ல நான் காதல் கொண்ட
நிமிடங்கள் என்னுள் விரிகின்றன

எனை ரசித்த அவன்
என் கவிதை கொண்டாடிய அவன்
என் இயல்பைப் புகழ்ந்த அவன்
கொஞ்சம் கொஞ்சமாய் இதழ் தீண்டி
உயிர் நுழைந்தவன்

தொலை பேசி நிமிடங்கள்
நீண்டு கொண்டே இருந்த காலங்கள்

கைப் பிடித்து காதல் சொல்லி
கனவுகளில் வாழக் கற்றுகொடுத்தவன்
தலையணைகளுக்குள் மென் காமம்
தூவி விட்டு சென்றவன்

இரவுகளின் நீள் பொழுதுகளில்
அருகாமை உணரச் செய்தவன்

இன்றும் என் வியர்வையின் மணம்
அவனுடையதாய் இருப்பதை உணர்கின்றன
உடலின் வியர்வைச் சுரப்பிகள்

மணம் உணர்ந்த மனத்துடன் கடிதம் தொடர்கிறேன்

தொடரும் வார்த்தைகள் கட்டெறும்புகளாய்
நிறைகின்றன என் அறைச் சுவற்றில்
அவன் திருமண மாலையின் மணத்துடன்

காரணங்கள் அடுக்கடுக்காய்
படியேறி வருகின்றன
கதவடைக்கத் தெரியாமல்
இன்னும் கடிதத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
கடிதத்துடன் மட்டும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்

எறும்புகள் என் கால் விரல் சுவைத்துத்
தின்றபடி முன்னேறிக் கொண்டிருக்கின்றன
ஒவ்வொரு பாகமாய் ருசி பார்க்க!!!!

Monday, April 19, 2010

எனது மற்றுமொரு ப்ளாக்-ன் பதிவு.

எனது மற்றுமொரு ப்ளாக்-ன் பதிவு. 
http://payanangalil.blogspot.com/2010/04/deyyyyyyyyyyyy.html

Tuesday, March 30, 2010

எனக்கும் விருது !!!!

விருதிற்கு நன்றி பத்மா (http://kakithaoodam.blogspot.com/)












இன்னும் பலருடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என நினைக்கிறேன். அவர்களுடன் மீண்டும் அடுத்த பதிவில். :)

Tuesday, March 23, 2010

சிவமெரிக்கும் நான்



















வடுவாய் நிற்கிறது
வாழ்ந்து கழிந்த வாழ்க்கை

தொடரத் துடிக்கும் கால்களை
வெட்டிப் போடுகிறது
நிதர்சனம்

எனை மறைத்து தான் மட்டும்
நான் போல் போகிறது
என் நிழல்

வலியுடனே வாழ்கிறேன்
சுகமாய் இருப்பதாய்ச்
சொல்லிக் கொள்கிறேன்
எனக்கு நானே

எனை நானே கொல்கிறேன்
அனைத்தும் மறந்து விட்டதாய்
அல்லது மறைந்துவிட்டதாய்

மண் குழைத்து எனைச் சுற்றி
சுவர் எழுப்புகிறேன் 
கால்கள் மறைத்து மேல் எழும்புகிறது

செங்கற்கள் கொண்டு கட்டிடம்
தனைக்கட்டிக் கொள்கிறது

சுவர் எங்கும் நீ விசிறி விட்டுப் போன
இரத்தத் தெறிப்புகள்

என் மேகம் எங்கும் மின்னல் தெறித்து
என் உடல் எரிக்கிறது
என் காலின் கீழே
சிவமெரித்துக் கிடத்தி இருக்கிறேன்

நானே வானாய்
மாறிப் போன நிமிடத்தில்
எனக்கு ஆயிரம் கைகள் முளைத்தது
ஒவ்வொரு விரலிலும்
ஆயிரம் சிசுக்கள்
உதிரம் குடித்தபடி

நண்பகலில் மிளகாய் அரைத்து
உள்ளங்காலில் பூசி
ஒப்பனைகள் தொடர்கிறேன்

காயங்கள் காயும் முன்
நெருப்பெடுத்து அப்பிக் கொள்கிறேன்

கட்டிடம் முடியும் தருணம்
நானே கல்லாய் மாறிப் போகிறேன்

மனிதம் தேடி தவம் தொடர்கிறது

மறுபடி ஒரு பயணம்















நிகழ் காலங்கள் நிஜம்
போலத் திரிகின்றன
கடந்து வந்தவை காணாமல்
போய் விட்டதாய்
ஒரு உணர்வு

இன்றிருப்பது மட்டுமே இன்றாகிப் போகிறது

ஏதோ ஒரு காட்டுக்குள்
கட்டவிழ்ந்து கிடக்கிறேன்
பயணங்களின் முடிவு தேடி
நடந்து கொண்டே இருக்கிறது நேரம்

உடன் நடக்கும் பாதச் சுவடு
மறந்து பாதை மாறி நடக்கிறேன்
எங்கோ சிதறும் ஒரு துளி நீரின்
சத்தத்துக்காக

ஒவ்வொரு நாளும் புதிதாய்ப்
பிறக்கிறேன்
மறுபடி ஒரு பயணத்துக்காக

நீர்த்துப் போன வாழ்வில்
சாரல் அடித்து
வெடித்துத் திறக்கிறது
என் பாலை

வெளியெங்கும் விரவிக் கிடக்கிறது
எப்போதோ சிந்திப் போன
புணர்ச்சியின் மிச்சங்கள்

அணைத்துப் போன தடங்கள்
தடுமாற்றத்துடன்
நிகழ்ந்ததைச் சொல்கிறது
என் இரவுக் கதைகளில்

தொடங்கும் இடம் தேடி
அலைகிறது மறந்து போன
காதலின் எச்சங்களை
மனம்

ஏன் வந்ததென்று தெரியாமல்
வந்து விட்டு போகிறது
ஒவ்வொரு இரவுகளிலும்
நேற்றின் ஆழ் முத்தங்கள்

நீளும் பயணம்
நீண்டு கொண்டே இருக்கிறது
மேலும் மேலும்
இன்னும் இன்னும்

மறுபடி ஒரு பயணத்துக்காய்
நான்